
சிஎஸ்கே போட்டிகள்
கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கடைசி போட்டியை சென்னை மைதானத்தில் தான் விளையாடுவேன் எனக்கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுக்கொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட முணைப்பு காட்டி வருகிறார். இதற்காக அடுத்த மாதம் சென்னை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கிவிடும்.

ஜேமிசன் விலகல்
இந்நிலையில் இதற்கு தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ஜேமிசன், கடந்த சில நாட்களாகவே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார். அவருக்கான சிகிச்சைகள் நடந்துக்கொண்டே தான் இருந்தன.

அறுவை சிகிச்சை
ஆனால் தற்போது ஜேமிசன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 3 - 4 மாதங்களுக்கும் மேல் ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல்-ல் இருந்து விலகியிருக்கிறார். சென்னை அணியில் கடந்தாண்டு தீபக் சஹார் விலகியிருந்தார் என்பதே பல பின்னடைவுகளை கொடுத்திருந்தது. அவரே இன்னும் முழு ஃபார்முக்கு வந்தாரா என்பது சந்தேகம் தான். இந்த சூழலில், ஜேமிசனும் வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது.

மாற்று வீரர் யார்?
கெயில் ஜேமிசனுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே தேர்வு செய்துக்கொள்ளலாம். அதன்படி முன்னணி பவுலர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு சென்னை அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் வரும் மார்ச் 31ம் தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











