
டிஎன்பிஎல் தொடர்
சேலம் மற்றும் கோவை அணிகள் மோதிய முதல் போட்டிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா காணொலி காட்சி மூலம் வர்ணனைக்கு வந்தார். அப்பொழுது அவரிடம் தமிழ் கலாச்சாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவர் வேட்டி, தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவதாலும், விசில் அடிப்பது போன்ற கலாசாரத்தை கடைப்பிடிப்பதை பார்ப்பதால் இந்த கேள்வி எழுப்பப்படுவதாக கமெண்ட்டேட்டர் கூறினார்.

சர்ச்சை பேச்சு
இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, நான் நினைக்கிறேன். நானும் பிராமணன்தான். சென்னையில் கடந்த 2004ல் இருந்து விளையாடி வருகிறேன். இந்த கலாசாரம் எனக்கு பிடித்துள்ளது. எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன். ஸ்ரீகாந்த், பத்ரி, எல். பாலாஜி ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். இங்கிருந்து கற்பதற்கு சில விஷயங்கள் உள்ளன. சென்னை கலாசாரத்தை விரும்புகிறேன் எனக்கூறினார்.

கொந்தளித்த ரசிகர்கள்
இந்நிலையில் அவர் பிராமணம் தான் சென்னை கலாச்சாரம் என்பது போல நானும் பிராமணன் தான் எனக்கூறியிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா எப்படி தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

சிஎஸ்கே
34 வயதாகும் சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேசத்தின் முராத்நகரில் பிறந்தவர் ஆவார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











