சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 17 வயதான ஆயுஷ் மத்ரே இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மத்ரே 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுரேஷ் ரெய்னா, ஆயுஷ் மத்ரே அடுத்த 10 ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என கூறியுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் ஆயுஷ் மத்ரே மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆயுஷ் மத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

17 வயதான வீரர் என்ற போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரது ஆட்டத்தை பார்த்து உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அவர் சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆட்டம் வீரேந்தர் சேவாக்கின் ஆட்டத்தைப் போலவே இருப்பதாக சுரேஷ் ரெய்னா அவரை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "'அவரது கால் இருக்கும் இடத்தை பாருங்கள். அவர் தலையை எப்படி வைத்துக் கொள்கிறார் என்று பாருங்கள். இது எனக்கு வீரேந்தர் சேவாக்கை நினைவுபடுத்துகிறது. அவரது பேட்டிங்கின் போது தலை இதே போலவே வைத்துக் கொண்டு ஆடுவார்."
"வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினார். அதை அடுத்து சூர்யகுமார் யாதவ் அவரை பாராட்டினார். ரோகித் சர்மாவும் அவரிடம் சென்று பேசினார். இந்த வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் ஆடுவார். அதை அவர் கடந்த போட்டியிலேயே வெளிப்படுத்தினார். ஆயுஷ் மத்ரேவை அணியில் விளையாட வையுங்கள். உங்களுக்கு விசுவாசமான, கம்பீரமான பேட்டிங் கிடைக்கும்' என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.