சென்னை: குஜராத் அணிக்காக ஆடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் மூலமாக சிஎஸ்கே அணி வாங்கிவிட்டதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு என்ன ரோல் கொடுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ள நிலையில், பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் பலரும் அந்த அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளனர். இதனால் அந்த வீரர்களை மினி ஏலத்தில் பங்கேற்க விடாமல், டிரேட் மூலமாக வாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே சிஎஸ்கே அணியும் கடந்த சில ஆண்டுகளில் பின்பற்றி வந்த ஸ்டைலை மாற்ற முடிவு செய்துள்ளது. கடந்த சீசனில் இளம் வீரர்கள் செய்யப்பட்ட முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் சிஎஸ்கே அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்களாக உருவாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் கீழ் விளையாட இளம் வீரர்களை கொண்ட அணியை சிஎஸ்கே தயார் செய்ய தொடங்கி இருக்கிறது. இதனிடையே ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கான மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேடி வந்தது. இந்த சூழலில் குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு நிரந்தர இடத்தை கொடுக்க முடியவில்லை.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டிலும் வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்வினின் இடத்தை நிரப்ப தொடங்கி இருக்கிறார். பவுலிங்கில் இன்னும் மேம்பட வேண்டும் என்றாலும், அனுபவத்தின் மூலமாக அதனை ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் அணிக்காக ஆடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து கொள்ள சிஎஸ்கே அணி அணுகி இருக்கிறது.
அதற்கு குஜராத் அணியும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அஸ்வினின் யூடியூப் சேனலில் முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் ஒருவரிடம் விசாரித்த போது, வாஷிங்டன் சுந்தர் மஞ்சள் ஜெர்சியை அணிய போகிறார். அந்த டீல் முடிந்துவிட்டது. பெர்சனலாக தமிழக வீரரிடம் பேசிய போது, இதனை உறுதி செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படி பயன்படுத்தும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில் அஸ்வினுக்கே நிரந்தர இடத்தை கொடுக்க முடியாமல் சிஎஸ்கே அணி திண்டாடியது. இதனால் வாஷிங்டன் சுந்தர் எந்த இடத்தை விளையாடுவார் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கி இருக்கிறது.