சென்னை: ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருள் ஆகி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்ற முயற்சி, ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே-வின் தூணாக இருந்த அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்படுவது குறித்து, அந்த அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது வேதனையையும், ரசிகர்களின் ஆதங்கத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
"இது நாம் அறிந்த சிஎஸ்கே அணியைப் போலவே இல்லை. வீரர்களின் விசுவாசத்திற்கு மதிப்பளிப்பதே அந்த அணியின் அடையாளம். ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும்போது, ரசிகர்களின் கோபம் முற்றிலும் நியாயமானது" என்று அவர் கூறியுள்ளார்.

தனது யூடியூப் வீடியோவில் இதுகுறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், சிஎஸ்கே அணியின் அடிப்படைக் கொள்கையே இந்த பரிமாற்றத்தின் மூலம் கேள்விக்குறியாகி இருப்பதாகக் குறிப்பிட்டார். "ரசிகர்களின் உணர்ச்சிப்பூர்வமான கோணத்தை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இது சிஎஸ்கே அணியின் குணத்திற்கு முற்றிலும் மாறானது என்று நான் சொல்லியாக வேண்டும்."
"சிஎஸ்கே-வின் அடையாளம் என்பது விசுவாசமும், வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும்தான். அதுதான் அந்த அணிக்கு ஒரு பெரிய பிராண்டை உருவாக்கியது. நிச்சயமாக, இவை அனைத்தும் தோனியைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், இந்தச் செய்தியை பல ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை" என்று அஸ்வின் தெரிவித்தார்.
ஜடேஜா அணியை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தியால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் வேதனையையும், அவநம்பிக்கையையும் கொட்டித் தீர்த்து வருவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார். "நான் இந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். சிஎஸ்கே ஒரு தந்திரத்தை தவறவிடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் நான் பார்ப்பதெல்லாம், ஜடேஜா அணியை விட்டு விலகுவது குறித்து ரசிகர்கள் எவ்வளவு வேதனையுடன் பதிவிடுகிறார்கள் என்பதுதான்" என்று அஸ்வின் ரசிகர்களின் பக்கம் நின்று பேசினார்.
சிஎஸ்கே-வின் வெற்றிப் பயணத்தில் ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. அந்த அணிக்காக 186 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2,198 ரன்கள் குவித்ததுடன், 143 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றின் மிக மதிப்புமிக்க ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
இந்த வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று செய்திகள் வந்தாலும், இரு அணி நிர்வாகங்களும் இதுவரை மௌனம் காத்து வருகின்றன. இதற்கிடையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் சில சிக்கல்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. முதலாவதாக, சாம் கரணை அணிக்குள் சேர்க்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் இல்லை. எனவே, அவர்கள் தங்களது வெளிநாட்டு வீரர் ஒருவரை விடுவித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும்.
இரண்டாவதாக, ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா நிபந்தனையாகக் கேட்பதாகவும் கூறப்படுவது, அந்த அணியின் எதிர்காலத் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஒருபுறம் ஒப்பந்தச் சிக்கல்கள், மறுபுறம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கடும் எதிர்ப்பு என இந்த மெகா பரிமாற்ற முயற்சி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.