மும்பை: சிஎஸ்கே அணி தரப்பில் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில், ரசிகர்களிடையே புதிய விவாதம் ஒன்று தொடங்கி இருக்கிறது. அதாவது சிஎஸ்கே அணியின் காம்பிஷேனுக்கு சஞ்சு சாம்சன் சரிபட்டு வர மாட்டார் என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் வீரர்களை மட்டும் வாங்கிவிட்டு, சீனியர் வீரர்களை டிரேட் மூலமாக பெறுவதற்கான முயற்சிகளை பல்வேறு அணிகளும் முயன்று வருகிறது.

இதனிடையே ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகுவதாக சஞ்சு சாம்சன் முடிவு எடுத்திருக்கிறார். வேறு ஏதேனும் அணிக்கு டிரேட் மூலமாக அனுப்பவோ அல்லது மினி ஏலத்தில் ரிலீஸ் செய்யவோ சஞ்சு சாம்சன் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தரப்பில் சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால் ராஜஸ்தான் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவரை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் கோரிக்கையையை சிஎஸ்கே அணி எந்தவித ஆலோசனையும் இல்லாமல் நிராகரித்தது.
இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று புரிய வந்துள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியின் காம்பினேஷனுக்கு சஞ்சு சாம்சன் செட்டாக மாட்டார் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. அதாவது தொடக்க வீரராக ஆயுஷ் மாத்ரே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தயாராக இருக்கின்றனர்.
நம்பர் 3ல் உர்வில் படேல், நம்பர் 4ல் சிவம் துபே, நம்பர் 5ல் டிவால்ட் பிரெவிஸ், நம்பர் 6ல் ஜடேஜா என்று 6 பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதனால் ஒரேயொரு ஃபினிஷர் மட்டுமே சிஎஸ்கே அணியின் தேவையாக உள்ளது. அதேபோல் தொடக்க வீரர்கள் இடத்தில் விளையாட கான்வே தயாராக இருக்கிறார். ரச்சின் ரவீந்திராவும் டி20 கிரிக்கெட்டில் கிளிக்காகிவிட்டால், அவரை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
இதனால் சஞ்சு சாம்சனுக்காக ரூ.18 கோடி முதலீடு செய்வதை விட்டுவிட்டு நல்ல ஃபினிஷர் மற்றும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். தோனியின் இடத்தை நிரப்புவதற்கு இளம் வீரர்களை யாராவது கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனால் சஞ்சு சாம்சனை வாங்குவதில் இருந்து சிஎஸ்கே அணி பின் வாங்கியது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சனின் வருகை சிஎஸ்கே அணிக்கு பிராண்ட் ரீதியாக வளர்ச்சி அடைய உதவும் என்றாலும், சிஎஸ்கே அணியின் வெற்றியை பாதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.