சென்னை: 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த சீசனில் சந்தித்த சறுக்கல்கள் மற்றும் ஏமாற்றங்களை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறியும் வகையில், இந்த முறை 'கடப்பாரை' பலத்துடன், அதாவது அதிக அதிரடி பேட்ஸ்மேன்கள் கொண்ட ஒரு புதிய அணியை சிஎஸ்கே நிர்வாகம் கட்டமைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஜாம்பவான்கள் மற்றும் இளமைத் துடிப்பான புதிய வீரர்கள் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு அதிரடிப் படையாக சென்னை அணி இந்த ஆண்டு காட்சி தருகிறது.
இந்த சீசனில் சென்னை அணியின் மிகப்பெரிய பலமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட சஞ்சு சாம்சன் தான். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியின் நங்கூரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவருடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகவோ அல்லது டாப் ஆர்டரிலோ களமிறங்குவது அணிக்கு அதிரடி துவக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்பிளே ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறடிக்கும் திறமை கொண்ட சாம்சன், இந்த சீசனில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இவர்களுடன் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும் இணைந்திருப்பது டாப் ஆர்டரை மேலும் பலப்படுத்தியுள்ளது. எவ்வித பயமும் இன்றி அதிரடியாக விளையாடும் ஆயுஷ் மாத்ரே இந்த சீசனில் 300 ரன்களுக்கு மேல் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் சென்னை அணியின் வியூகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, சர்வதேச போட்டிகளில் விளையாடாத 19 வயதான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா மற்றும் ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர் ஆகிய இருவரையும் தலா 14.20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே சாதனை படைத்தது.
எம்.எஸ் தோனியின் இடத்தை எதிர்காலத்தில் நிரப்பும் வீரராக பார்க்கப்படும் கார்த்திக் சர்மா, அதிரடியாகப் போட்டியை முடித்து வைக்கும் பினிஷிங் திறன் கொண்டவர். அதேபோல், ரவீந்திர ஜடேஜா இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் இடதுகை சுழற்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் என இரண்டிலும் பிரசாந்த் வீர் மிரட்டக் காத்திருக்கிறார்.
நடுத்தர வரிசையில் 'பேபி ஏபி' என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் சிவம் துபே ஆகியோர் உள்ளனர். ப்ரீவிஸ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளைச் சிதறடிக்கும் 360 டிகிரி பிளேயர் ஆவார். சுழற்பந்து வீச்சாளர்களின் சிம்மசொப்பனமான சிவம் துபே வழக்கம் போல் சிக்ஸர் மழை பொழியத் தயாராக உள்ளார்.
சேப்பாக்கம் மைதானம் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால், ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். உள்ளூர் மைதானத்தில் எதிரணிகளைத் தனது சுழலில் அவர் எளிதாகச் சிக்க வைப்பார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் மற்றும் கலீல் அகமது ஆகியோர் முக்கியப் பங்காற்றுவார்கள்.

இவர்களுடன் மேட் ஹென்றி, ராகுல் சஹார், சர்பராஸ் கான் போன்றோரும் மாற்று வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக, 'தல' தோனி தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் அணியை வழிநடத்த உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சிவம் துபே, கார்த்திக் சர்மா என ஒரு முழுமையான சாம்பியன் அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு, இந்த ஆண்டு கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு வீச்சில் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
