சென்னை: 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவிலும் அந்த அணி கடைசி இடத்தில் இருக்குமா? என வீரேந்தர் சேவாக்கிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதைக் கேட்டவுடன் அவர் வெடித்து சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவரது இந்த நடவடிக்கை மற்றும் சிஎஸ்கே அணி இதை அனுபவிக்க வேண்டும் என்று அவர் அளித்த பதில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. சிஎஸ்கே மற்றும் தோனி மீதான தனது வன்மத்தை சேவாக் வெளிப்படுத்தி இருப்பதாக அவர்கள் விமர்சனம் செய்து உள்ளனர். என்ன சொன்னார் சேவாக்?

வீரேந்தர் சேவாக், தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுமோசமாக விளையாடி வரும் நிலையில், சேவாக்கிற்கு இது கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் கேப்டனான தோனியின் ஆட்டத்தை விளாசி எடுத்து வருகிறார் வீரேந்தர் சேவாக்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றில் நடந்த ஐபிஎல் விவாத நிகழ்ச்சியின் போது, 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை அதிக முறை பிளேஆஃப் சென்ற அணியாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்தால் அதன் மூலம் ஒரு அணியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என எடுத்துக் கொள்ளலாமா?' என வீரேந்தர் சேவாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சிரித்த சேவாக், 'உங்கள் வாயில் நெய்யும் சர்க்கரையும் தான் போட வேண்டும்' என்றார்.
மேலும் இது பற்றி பேசுகையில், 'டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணி அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றாலும் நெய்யும் சர்க்கரையும் வாயில் போடலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில்தான் இருக்கும் என என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் அப்படி இருந்தால் அது மிகவும் சிறப்பானது. ஏனெனில், பத்தாவது இடத்தில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் அனுபவிப்பார்கள். அவர்கள் பலமுறை இறுதிப் போட்டியில் விளையாடிவிட்டார்கள்.' என்றார்.
தொடர்ந்து பேசிய சேவாக், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு புதிய பார்வை (அணுகுமுறை) இல்லை. எந்த வீரரை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். எந்த வீரர்களை சேர்த்து விளையாட வைத்தால் அந்த அணி சிறப்பாக விளையாடும் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அவர்கள் இதுவரை செய்த எந்த முயற்சியும் வேலை செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது."
"அனுபவம் வாய்ந்த வீரர்களை துவக்க வீரர்களாக ஆட வைத்தது வேலை செய்யவில்லை. தற்போது புதிய வீரர்கள் விளையாடுகிறார்கள், அதுவும் வேலை செய்யவில்லை. இன்னும் சில போட்டிகள் உள்ளன. அவர்கள் இதை வைத்து தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எந்தெந்த வீரர்களை அடுத்த ஆண்டு தக்க வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். யாரை வெளியேற்ற வேண்டும்? யாரை புதிதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
சிஎஸ்கே அணி பத்தாவது இடத்தில் இருப்பதை அனுபவிக்க வேண்டும் என சேவாக் கூறி இருப்பது தான் விமர்சனத்தை சந்தித்து உள்ளது.