சென்னை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் மோசமான ரன் ரேட்டை சிஎஸ்கே அணி வைத்திருக்கிறது. இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளிலும் சேர்த்து சிஎஸ்கே அணியின் பவர் பிளே ரன் ரேட் 7.4ஆக மட்டுமே இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. 2019ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி 175 ரன்களுக்கு மேல் ஒருமுறை கூட சேஸிங் செய்து வென்றதில்லை. இதனால் சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா - டெவான் கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், கான்வே 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இதன் மூலமாக இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட பவர் பிளே ஓவர்களில் 50 ரன்களை சேர்க்கவில்லை என்ற சாதனை தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக ஆடிய 10 அணிகளில் பவர் பிளே ஓவர்களில் மோசமான ரன் ரேட் வைத்துள்ள அணியாக சிஎஸ்கே அணி இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பவர் பிளே ரன் ரேட் வெறும் 7.4 மட்டும்தான்.
மீதமுள்ள 9 அணிகளின் ரன் ரேட்டும் குறைந்தபட்சமாக 8.1 ஆக உள்ளது. பவர் பிளே ஓவர்களில் சிறந்த ரன் ரேட்டை ராஜஸ்தான் அணி வைத்திருக்கிறது. அந்த அணியின் பவர் பிளே ரன் ரேட் 11.7ஆக இருக்கிறது. பவர் பிளே ஓவர்களில் 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
இதனால் பவர் பிளே ஓவர்களில் பெரிய ஸ்கொரை அடிப்பதற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று அனைத்து அணிகளும் பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டுவார்கள். ஆனால் சிஎஸ்கே அணியோ தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்து டாட் பால் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இ6தனால் ரசிகர்கள் இந்த சிஎஸ்கே அணி இந்த சீசனை சாமிக்கு விட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.