சென்னை: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தோனி மிக விரைவாக பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், அதை நினைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வேதனைப்படும் வகையில் சம்பவங்கள் அரங்கேறின. 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய ஆரம்பித்தன. 10.4 ஓவர்களில் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணி. அப்போது 74 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு இருந்தது.

விஜய் சங்கர் ஆடுகளத்தில் இருந்தார். அப்போது ஏழாம் வரிசையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி விரைவாக பேட்டிங் செய்ய வந்துள்ளார் என்ற புள்ளி விவரம் வெளியானது. 2023 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தோனி முதல் 10 ஓவர்களுக்குள் ஆடுகளத்துக்கு வந்தார். அப்போதும் அதிக விக்கெட் வீழ்ந்து இருந்தன.
அதன் பிறகு 2024 ஐபிஎல் தொடர் முதல் இப்போது வரை தோனி 13வது ஓவர் அல்லது அதற்குப் பிறகுதான் பேட்டிங் இறங்கி வருகிறார். பெரும்பாலும் கடைசி நான்கு ஓவர்களில் தான் அதிக முறை பேட்டிங் செய்து இருக்கிறார். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் படுமோசமாக இருந்ததை அடுத்து தோனி முன்பே பேட்டிங் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதனால் அவர் அதிரடியாக ஆடுவார், சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அருகே அழைத்து செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆமை வேகத்தில் ஆடிய தோனி சிங்கிள் ரன்களாக எடுத்தார். பல டாட் பால்களையும் ஆடினார். அப்போதே சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதியானது.
19 பந்துகளை சந்தித்த பின் அவர் ஒரு சிக்ஸ் அடித்தார். இடையே ஃபோர் எதுவும் அடிக்கவில்லை. விஜய் ஷங்கரும் பல பந்துகளை வீணடித்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்ட முடியாத நிலைக்கு சென்று தோல்வி அடைந்தது.
கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்களும், டெவோன் கான்வே 13 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சிவம் துபே 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். விஜய் சங்கர் சற்று நிதானமாக ஆடினாலும் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை சேர்த்தார். அவர் 54 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். தோனி ஏழாம் வரிசையில் இறங்கி மிகவும் நிதானமாக ஆடினார். அவர் முடிவில் 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார்.