சிஎஸ்கே முதல் வெற்றியில் வெடித்த சர்ச்சை.. அம்பயருடன் மோதிய டெல்லி கோச்.. கிளவுஸ் விவகாரம்!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் முதல் வெற்றி என்பது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தில் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தோல்விக்கு அம்பயர்களின் முடிவே காரணம் என அந்த அணி நிர்வாகம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆட்டத்தின் 19-வது ஓவரின் போது டெல்லி அணி வெற்றி பெற 10 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மைதானத்தில் அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது கையுறைகளை மாற்ற அனுமதி கேட்டார். ஆனால் நான்காவது அம்பயர் அதற்கு அனுமதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி, வீரர்கள் நிதிஷ் ராணா மற்றும் கருண் நாயர் ஆகியோர் மைதானத்திற்கு வெளியே எல்லைக்கோட்டிற்கு அருகே அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வர்ணனையாளராக இருந்த சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பாப் டூ பிளசிஸ் இந்த மோதலுக்கான காரணத்தை விளக்கினார். கையுறைகளை மாற்ற அனுமதி மறுக்கப்பட்ட அடுத்த பந்திலேயே 60 ரன்கள் எடுத்திருந்த ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. டெல்லி அணியின் முக்கிய விக்கெட் விழுந்ததால் சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
213 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி 5 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தது. நிசங்கா 41 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு டெல்லி அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேமி ஓவர்டன், கலீல் அகமது மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையைப் பயன்படுத்தி துல்லியமாகப் பந்துவீசினர். குறிப்பாக ஓவர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியில் டெல்லி அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனின் முதல் வெற்றியாகும். அதே சமயம் டெல்லி அணிக்கு இது தொடர்ச்சியான 2-வது தோல்வியாகும். அம்பயர்களின் செயல்பாட்டால் டெல்லி அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மோதிய சம்பவம் ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications