சென்னை: ஐபிஎல் 2025 தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் தோனி மிக மெதுவாக பேட்டிங் செய்ததாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து, தோனியின் ஆட்டத்தை 'நமத்துப்போன பட்டாசு' என்று கிண்டலாக விமர்சித்தது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், தோனியின் புகழ் மங்கிவிடும் என்றும், உண்மை கசக்கத்தான் செய்யும் என்றும் அவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தோனி ஏழாவது வீரராக, போட்டியின் பத்தாவது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். அவர் களமிறங்கியபோது, அணியின் வெற்றிக்கு அதிரடியான ஆட்டம் தேவைப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தோனி தனது முதல் பவுண்டரியை அடிக்க 19 பந்துகளை எடுத்துக்கொண்டார்.
முக்கியமான கட்டத்தில், அணியின் தேவைக்கேற்ப அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. போட்டியின் இடையே, தோனிக்கு ஒரு 'ஃப்ரீ ஹிட்' வாய்ப்பு கிடைத்தது. சிக்ஸர்கள் விளாசுவதில் பெயர் பெற்ற தோனி, இந்த வாய்ப்பை எளிதாகப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் பந்தையும் தோனி தவறவிட்டார்.
சிக்ஸ் அடிக்க கிடைத்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தத் தவறியதால் அப்போது வர்ணனையில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து, "இப்போது அடிக்கவில்லை என்றால் எப்போதுதான் சிக்ஸர் அடிப்பார்? இது நமத்துப்போன பட்டாசாக மாறிவிட்டது" என்று கிண்டலாக விமர்சித்தார்.
இந்தப் போட்டியில் தோனி 26 பந்துகளைச் சந்தித்து, 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் பேட்டிங் செய்ய வந்தபோது, ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்தச் சூழலுக்கு ஏற்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடவில்லை. தோனி சுமார் 115 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடினார்.
போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து, "தோனி போட்டிகளை வென்று கொடுத்த நினைவுகள் இன்னும் நம் மனதில் பசுமையாக உள்ளன. நாம் அந்தப் பழைய தோனியைத் தான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால், இப்போது இருக்கும் தோனியை நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை."
"போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான முயற்சி அவரிடம் இல்லை.. தோல்வியோ வெற்றியோ, அது இயல்பானதுதான். ஆனால், வெற்றிக்காகப் போராட வேண்டும். இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி போராடியது. இந்த இடத்தில் தான் தோனியின் புகழைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அது மங்கிவிடுமோ என்ற கவலை எழுகிறது. உண்மை கசக்கத்தான் செய்யும், ஆனால் அதிலிருந்து நாம் ஓடி ஒளிய முடியாது" என்று தெரிவித்தார்.