சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருப்பதால், அந்த அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்திலேயே அடுத்தடுத்து தோல்வியடைந்ததன் காரணமாக, தோனி ஓய்வை அறிவிப்பது சரியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியடை பெற்றுள்ளது. ஆர்சிபி, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருப்பதால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கொஞ்சம் கூட வெற்றி பெற வேண்டும் என்று போராடாமல் சரண்டராகியது. 10 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்த பின் கொஞ்சம் கூட பவுண்டரியோ அல்லது சிக்சரோ அடிக்க விரும்பாமல், ரன் ரேட்டை காப்பாற்ற விஜய் சங்கர் மற்றும் தோனி ஆடியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
கடைசி வரை தோல்வியை ஏற்காமல் போராடுவதே தோனியின் குணமாக இருந்தது. ஆனால் இப்போது தோனி களமிறங்கும் போதே தோனி உறுதி என்பதை போல் விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் கூட தோனி தனது முதல் பவுண்டரியை 19வது பந்தில் தான் அடித்தார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தினாலே, சிஎஸ்கே தோல்வி உறுதி என்ற நிலை உருவாகி இருக்கிறது.
தொடக்கம் முதலே அட்டாக் செய்யாமல், விக்கெட்டை இழக்க கூடாது என்று கவனமாக ஆடுவது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து வெளி வந்த ரசிகர்களும் கூட வருத்தத்துடன் இருந்தனர். அப்போது சில ரசிகர்கள் பேசுகையில், இதற்கு மேல் தோனி விளையாடுவது சரியாக இருக்காது.
ஓய்வை அறிவிப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். ஏனென்றால் அவரிடம் பவர் ஹிட்டிங் இருந்தாலும், பழைய ஆட்டத்தை போல் இல்லை என்று கவலையுடன் தெரிவித்தனர். அதேபோல் மற்றொரு ரசிகர், சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3ம் மோசமாக இருக்கிறது. பவர் ஹிட்டர்கள் இல்லாதது கூடுதல் சிக்கல் என்று தெரிவித்தார்.
இத்தனை நாட்களாக தோனியை ஒருமுறை பார்த்தால் போதும் என்று சொல்லி வந்த ரசிகர்கள், தற்போது தோனியை ஓய்வு பெறலாம் என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ரசிகர்களுக்கு தோனியை விடவும், சிஎஸ்கே அணியின் வெற்றி முக்கியம் என்று பார்க்கப்படுகிறது.