சென்னை : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் டேரல் மிட்சல் பவுலிங் செய்த பின் சோர்வடைந்திருந்ததை உணர்ந்த ரஹானே, உடனடியாக அவரது ஃபீல்டிங் பொசிஷவை விட்டுக் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி மகத்தான வெற்றியை பெற்று மிரட்டியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் அத்தனை வீரர்களும் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். ரச்சின் ரவீந்திராவின் அதிரடி ஓபனிங், ரஹானேவின் ஃபீல்டிங், ருதுராஜ் கேப்டன்சி, துபேவின் மிரட்டல் அரைசதம், சமீர் ரிஸ்வின் கடைசி நேர சர்ப்ரைஸ், ஆல்ரவுண்டராக ஜொலித்த டேரல் மிட்சல், ஃபீல்டிங்கில் அசத்திய தோனி, பவுலிங்கில் மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சிஎஸ்கே அணியின் அத்தனை வீரர்களும் வெற்றிக்கு பங்களித்துள்ளனர்.
இந்த நிலையில் டேரல் மிட்சல் சோர்வடைந்த போது ரஹானே உதவிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென டேரல் மிட்சலை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே விஜய் சங்கரை 12 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன்பின் மீண்டும் 10வது ஓவரையும் வீசி அசத்தினார்.
அடுத்தடுத்து 2 ஓவர்கள் வீசியதால் டேரல் மிட்சல் கொஞ்சம் சோர்வடைந்திருந்தார். அந்த நேரத்தில் டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் நிற்க வைக்கப்பட்ட போது, அவரால் முழு எனர்ஜியுடன் ஓட முடியவில்லை. இதனை கவனித்த ரஹானே, நேராக அவரிடம் சென்று ஃபீல்டிங் பொசிஷனை மாற்றிக் கொண்டார். சிஎஸ்கே அணியில் சீனியரான ரஹானே, மிட்சலின் பிரச்னையை உணர்ந்து செயல்பட்ட சம்பவம் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியை போல் ஒரே குடும்பம் என்று கூறி வீரர்களுக்கு இடையில் ஈகோ யுத்தம் நடப்பதை போல் அல்லாமல், சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அணியின் நலனுக்கான முடிவுகளை எடுத்து வருவது அந்த அணியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.