அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 59வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அகமதாபாத் மைதானத்தில் ஆடும் முதல் போட்டி இதுவே.
இந்த போட்டியை காண பெருமளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த காட்சி மற்ற மாநிலங்களை சேர்ந்த சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் எங்கெங்கு காணினும் மஞ்சள் நிற மேலாடை அணிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அது மட்டுமின்றி அகமதாபாத் ரயில் நிலையத்திலும் போட்டியை காண வந்த ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" எனவும், "தோனி, தோனி" எனவும் கோஷம் எழுப்பியபடியே மைதானத்தை வந்து அடைந்தனர்.
இத்தனைக்கும் அகமதாபாத்தை சொந்த மைதானமாகக் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறது. முதல் ஆண்டிலேயே அந்த அணி ஐபிஎல் கோப்பையும் வென்றது. பொதுவாக ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிகள் மற்றும் வெற்றிகரமான அணிகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள்.
ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த இரண்டு தொடர்களில் வெற்றிகரமாக செயல்பட்டும் கூட அந்த அணியை காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையே குஜராத் மாநில மக்கள் அதிகம் விரும்புவது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதே அகமதாபாத் மைதானத்தில் வைத்து தான் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தது.
அப்படி இருந்தும் அங்குள்ள மக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் "தோனி" என்ற கிரிக்கெட் ஜாம்பவான் என அனைவருக்கும் தெரியும். உலகின் பெரிய மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெருமளவில் ரசிகர்கள் ஆதரவை அளித்திருப்பது மற்ற ஐபிஎல் அணிகளை பொறாமையில் தள்ளி இருக்கிறது என்பதே உண்மை.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல் தொடரில் பல முறை டாஸில் தோல்வி அடைந்த பின், இரண்டாவது முறையாக டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.