சென்னை : சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி-க்கு கொஞ்சம் கூட பயமே கிடையாது என்று பேட்டிங் பயிற்சியாளர் சமீர் ரிஸ்வி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தரப்பில் இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்டார். இளம் வீரர் ஒருவருக்காக சிஎஸ்கே அணி இவ்வளவு பெரிய தொகை செலவிட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடிய முதல் போட்டியிலேயே சமீர் ரிஸ்வி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

இது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டால், சில ஆண்டுகள் பெஞ்சில் இருந்து திறமையை நிரூபித்த பின்னரே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சமீர் ரிஸ்வி நேரடியாக பிளேயிங் லெவனுக்குள் வந்தார். முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பலரும் அவரது ஆட்டத்தை பார்க்க ஆர்வமாகினார்கள்.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி, முதல் பந்திலேயே ரஷீத் கானை ஸ்வீப் அடித்து சிக்சருக்கு விளாசினார். பின்னர் மீண்டும் ரஷீத் கானின் கடைசி பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்து மீண்டும் சிக்ஸ் விளாசி மிரட்டினார். 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரிஸ்வியின் ஆட்டம் சிஎஸ்கே அணி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், சமீர் ரிஸ்விக்கு இயற்கையாக அதிரடியாக விளையாடி அட்டாக் செய்ய கூடிய திறமை உள்ளது. அவரின் பயிற்சியின் போதே இதை கவனித்தோம். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் அட்டாக் தீவிரமாக உள்ளது. அவரால் மிகப்பெரிய சிக்சரை விளாச முடியும் என்பதோடு, பந்தை சரியாக டைம் செய்ய முடிகிறது. ஷாட்கள் அத்தனையும் முழுமையாக உள்ளது.
டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலரான ரஷீத் கானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே இளம் வீரர் அட்டாக் செய்ய வேண்டும் எதிர்பார்க்கவே கூடாது. ஆனால் அப்படியான ஒரு பவுலரின் முதல் பந்தை சிக்ஸ் அடிப்பது கொஞ்சம் வினோதமானது தான், இதன் காரணமாகவே ரிஸ்வின் ஆட்டம் மீதான சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் அவர் விளையாட ஆர்வமாக உள்ளார்.
அதேபோல் இளம் வீரர்கள் பலரும் கொஞ்சம் கூட பயமில்லாமல் விளையாடுகின்றனர். அவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதித்தாலே போதுமானது என்று நினைக்கிறேன். அதேபோல் ரிஸ்வியை களமிறக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவும் அற்புதமானது என்பேன். எல்லோரும் தோனி களமிறங்குவார் என்றே நினைத்திருந்தோம். ஆனால் ரிஸ்வியின் அதிரடி காரணமாக முடிவு மாற்றப்பட்டது. அதற்கேற்ப அவரும் 2 சிக்சரை விளாசி அசத்திவிட்டதாக தெரிவித்தார்.