கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆங்கிரிஷ் ரகுவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி புதிய வரலாறு படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றை தோனி படைத்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ரஸ்ஸல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை விளாசி இருக்கிறது. சிறப்பாக ஆடிய ரஹானே 48 ரன்களும், ரஸ்ஸல் 38 ரன்களும் சேர்த்தனர்.

சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததே இல்லை. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதனிடையே இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நூர் அஹ்மத் வீசிய 8வது ஓவரில் சுனில் நரைன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து தோனியின் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதே ஓவரில் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளை விக்கெட் கீப்பிங் மூலம் தோனி வீழ்த்தியதன் மூலமாக புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் 200வது விக்கெட் பங்களிப்பு இதுவாகும். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளில் பங்களிப்பு செய்துள்ள முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய வரலாற்றை தோனி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை 153 கேட்ச்கள் மற்றும் 47 ஸ்டம்பிட்களை தோனி செய்து விக்கெட் வீழ்த்த பங்களிப்பு செய்திருக்கிறார்.
இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக புதிய பாதையை அமைத்து கொடுத்த தோனி, ஐபிஎல் தொடரிலும் 43 வயதில் இளம் வீரர்களுக்கு விக்கெட் கீப்பிங்கில் சவால் அளித்து வருகிறார். என்னதான் பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை என்றாலும், தோனியால் விக்கெட் கீப்பிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட முடிவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.