சென்னை: ஐபிஎல் தொடரின் அடுத்த மினி ஏலத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியை தயார் செய்யும் பொறுப்பை கேப்டன் தோனி ஏற்றுக் கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அடுத்தடுத்து 2 வாரங்களில் 3 இளம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியை சில்ட்ரன்ஸ் அணி என்று ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் விளையாடி 9 தோல்வி, 2 வெற்றி என்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி வந்த போதும் கூட அந்த அணியால் எழுச்சிப் பெற முடியவில்லை. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கே டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பாக விளையாடுவதற்கான தொடக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷியின் தாக்கம் காரணமாக, சிஎஸ்கே அணியும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதேபோல் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரரான குட்டி ஏபி டி வில்லியர்ஸ் டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்கள் இருவருக்கும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் உடனடியாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் இரு வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு, கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இடத்தை உறுதி செய்துவிட்டனர்.
அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே ஆடிய ஆட்டம் தோனியையும் ஈர்த்துள்ளது. பயிற்சியாளர் ஃபிளெமிங் உள்ளிட்டோரும் ஆயுஷ் மாத்ரே நீண்ட காலம் சிஎஸ்கே அணியுடன் பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இளம் வீரரான வன்ஷ் பேடிக்கு பதிலாக 26 வயதாகும் இளம் வீரரான உர்வில் படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சையத் முஷ்டாக் அலிக் தொடரில் 29 பந்துகளில் சதம் விளாசி அசத்தியவர் உர்வில் படேல். சிஎஸ்கே அணியுடன் கடந்த சில மாதங்களாகவே பயிற்சி மேற்கொண்டு வரும், அடுத்த 3 போட்டிகளில் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் சிஎஸ்கே அணி 3 இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
வழக்கமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பாதி சீசனின் போது எவ்வளவு எளிதாக யாரையும் ஒப்பந்தம் செய்யாது. ஐபிஎல் மினி ஏலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று தான் நிதானம் காப்பார்கள். ஆனால் இம்முறை அடுத்தடுத்து 3 இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி ஒப்பந்தம் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த மினி ஏலம் வரை காத்திருக்க தோனி விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் மினி ஏலத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியை இளம் வீரர்களை கொண்டு தயார் செய்ய தோனி முடிவு எடுத்திருக்கிறார்.
இதனால் அடிப்படை தொகைக்கு இளம் வீரர்களை வாங்கிவிட்டு, ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல தொகையுடன் சென்று தேவையான வெளிநாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விரைவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவையும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.