கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் உர்வில் படேலுக்கு சான்ஸ் கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக உர்வில் படேல் சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், கேகேஆர் அணி எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதற்கேற்ப கேகேஆர் அணியும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்த விவாதம் ரசிகர்களிடையே நடந்து வருகிறது. ஏனென்றால் ஆயுஷ் மாத்ரே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சிஎஸ்கே அணியுடன் இணைந்த அடுத்த போட்டியிலேயே அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களும் அதற்கேற்ப சிறப்பாக விளையாடி தோனியின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
இதனிடையே கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் இளம் வீரர் வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பயிற்சியின் போது காயம் அடைந்ததால், அவர் விலகினார். அவரை சக வீரர்கள் தூக்கி சென்ற சம்பவமும் மைதானத்தில் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து வன்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல், மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர். சையத் முஷ்டாக் அலி தொடரில் 29 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தவர். இதனால் தீபக் ஹூடாவுக்கு பதிலாக உர்வில் படேல் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கேற்ப அவரும் சிஎஸ்கே அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வந்தார்.
அதேபோல் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளதால், கேகேஆர் அணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்படலாம் என்றும் பார்க்கப்படுகிறது. கேகேஆர் அணியின் ஒரு சிறிய தவறும் கூட அந்த அணிக்கு எதிராக திரும்பிவிடும். இதனால் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.