சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுமோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதற்கு முதலும் முக்கிய காரணமும் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் தான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் மூத்த வீரரான மொயின் அலி தான் சிஎஸ்கே அணியின் வீழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் இடம் பிடித்திருந்தார். ஆனால், கடந்த ஏலத்தில் அவரை சிஎஸ்கே அணி விடுவித்திருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கியிருந்தது.

அவருக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான சுனில் நரைன் துவக்கத்தில் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அப்போதும் மொயின் அலி அவருக்கு பதிலாக விளையாடி சிறப்பான ஆல்ரவுண்டர் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் காரணமாக அவருக்கு தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. நேற்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மொயின் அலி முக்கிய வீரராக செயல்பட்டார். சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இரண்டாவது ஓவரை வீசினார் மொயின் அலி. அவர் வீசிய இரண்டாவது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
அடுத்து அவர் வீசிய நான்காவது ஓவரில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் டெவோன் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மொயின் அலி தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் நான்கு ரன்கள் மற்றும் ஒரு மெய்டன் ஓவர் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அங்கிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் பின் ஹர்ஷித் ராணா வீசிய ஓவரில் ரச்சின் ரவீந்திரா நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆதிக்கம் செலுத்த துவங்கினர்.
மொயின் அலி தான் வீசிய நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவரது இந்த பந்துவீச்சு இந்த போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும், சுனில் நரைன் நான்கு ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவரே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். சிஎஸ்கே கைவிட்டது சரியா எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 104 ரன்கள் என்ற இலக்கை 13.1 ஓவர்களிலேயே எட்டியது. அந்த அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில், 59 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இமாலய வெற்றி பதிவு செய்தது.