IPL 2025: தோனி செய்த சொதப்பல்.. அஸ்வினுக்கு எதற்கு பவர்பிளேவில் ஓவர்? உறைந்து போன ரசிகர்கள்
சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னர் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோனி கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு விளையாடியதால் ரசிகர்கள் அவர் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
அவர் தலைமையில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதைப் பார்க்க ஆவலுடன் இருந்தனர். ஆனால், வெறும் 103 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் சிஎஸ்கே அணி சொதப்பிய நிலையில், அடுத்து சிஎஸ்கே அணி பந்து வீசியபோது தோனி தனது அனுபவ கேப்டன்சியை வெளிப்படுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறிய அளவிலாவது அழுத்தத்தை கொடுப்பார் என்றும், அந்த அணி 104 ரன்கள் என்ற இலக்கை நிதானமாக எட்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதுவும் நடக்கவில்லை. தோனியின் கேப்டன்சியும் விமர்சிக்கும் வகையிலேயே இருந்தது. குறிப்பாக பவர் பிளேவில் அஸ்வினுக்கு ஓவர் கொடுத்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அஸ்வின் தனது துவக்க காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பவர் பிளேவில் பந்து வீசுவார்.
அப்போது அஸ்வினை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினார்கள், விக்கெட்டையும் இழந்தார்கள். ஆனால் இப்போது அஸ்வின் எப்படி பந்து வீசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகவே உள்ளது. அவரது பந்துவீச்சை சமீப காலத்தில் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் எளிதாக அணுகி ரன் குவித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அஸ்வினுக்கு பவர் பிளேவில் நான்காவது ஓவரை அளித்தார் கேப்டன் தோனி. அதன் பிறகு ஏழாவது ஓவரையும் அளித்தார். அந்த இரண்டு ஓவர்களிலும் அஸ்வின் மொத்தம் 26 ரன்களை வாரி வழங்கினார். ஏற்கனவே, சிஎஸ்கே அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் நூர் அகமதுக்கு பந்து வீச வாய்ப்பளித்திருக்கலாம் என பலரும் சுட்டிக்காட்டினர்.
நூர் அகமது எட்டாவது ஓவரில் தான் பந்து வீச வந்தார். அவர் வந்தவுடன் தான் வீசிய முதல் பந்திலேயே சுனில் நரைன் விக்கெட்டை வீழ்த்தினார். அவரை பவர் பிளேவில் பந்து வீச வைத்திருந்தால் நிச்சயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறிய அளவிலான அழுத்தத்தை அளித்திருக்கலாம் என்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மேலும், இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் முதல் இரண்டு ஓவர்களை வீசி முடித்த நிலையில் அதில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இளம் திறமையாளரான அவருக்காவது தொடர்ந்து வாய்ப்பளித்திருக்கலாம். அவர் ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில் தொடர்ந்து பந்து வீசச் செய்து அவர் மேலும் விக்கெட் வீழ்த்த வாய்ப்பளித்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
எனவே, தோனியின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் இன்னும் பழைய முறைகளை கையாள்கிறார் எனவும், அஸ்வின் இளம் பந்துவீச்சாளர் என்பது போல அவருக்கு பவர் பிளேவில் வாய்ப்பு அளித்திருக்கிறார் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். 104 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களிலேயே எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications