கொல்கத்தா: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிஎஸ்கே அணி வீரர்கள் யார்க்கர் மற்றும் லோ ஃபுல் டாஸ் பந்துகளை வீசியிருக்க வேண்டும் என்று தோனி பேசி இருந்தார். தோனி வார்த்தையை சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் அப்படியே பின்பற்றி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்த போது, கடைசி 2 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை விட்டுக் கொடுத்தது. சிஎஸ்கே அணியின் கலீல் அஹ்மத் மற்றும் பதிரானா இருவராலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீச முடியவில்லை. இதனால் போட்டி முடிவடைந்து சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், சிஎஸ்கே பவுலர்கள் யார்க்கர்கள் வீச அதிக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பதிரானா போன்ற ஒரு பவுலரால் யார்க்கர் பந்துகளை வீச முடியவில்லை என்றால், லோ ஃபுல் டாஸ் பந்துகலை வீச திட்டமிட வேண்டும். ஏனென்றால் டெத் ஓவர்களில் யார்க்கருக்கு பின் லோ ஃபுல் டாஸ் பந்துகளை சிக்சருக்கு அடிப்பது கடினமாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். இதனால் சிஎஸ்கே பவுலர்களின் செயல்பாடுகள் இனியாவது மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதற்கேற்ப கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அண்ணன் தோனியின் அட்வைஸை தீவிரமாக எடுத்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. ரஸ்ஸல் பேட்டிங் ஆடிய போது, பதிரானா யார்க்கர் வீச முயற்சித்து ஸ்லாட்டில் பந்தை வீசினார். அது சிக்சருக்கு பறந்தது.
இதன்பின் உடனடியாக லெந்தை மாற்றி கொஞ்சம் ஒய்டாக வீசினார். அந்த பந்தும் பவுண்டரிக்கு சென்ற போது, உடனடியாக லோ ஃபுல் டாஸ் பந்தை கால்களை நோக்கி வீசினார். அதேபோல் ஒய்டு யார்க்கர் பந்துகளையும் தனது 3வது ஓவரில் பதிரானா வீசி அசத்தினார். இருந்தாலும் கடைசி ஓவரை சிறப்பாக வீசுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே பதிரானா விட்டுக் கொடுத்தார். டீப் பாய்ண்ட் திசையில் மட்டுமே ஒரு ஃபீல்டரை நிறுத்தி வைத்து பதிரானா லோ ஃபுல் டாஸ் பந்துகளை மாற்றி மாற்றி வீசிக் கொண்டே இருந்தார். இது அவருக்கும் பயனளித்தது. இந்த ஓவர் முடிவடைந்த பின் தோனி மேலும் சில ஆலோசனை பதிரானாவுக்கு வழங்கினார்.
இந்த சீசனில் பதிரானாவின் பவுலிங் ஆக்ஷம் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து விக்கெட் வீழ்த்த முடியாமலும், ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் தடுமாறி வந்தார். ஆனால் கடந்த 3 போட்டிகளாகவே பதிரானா கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்கு வந்து கொண்டிருக்கிறார். இதனால் விரைவில் விக்கெட் வேட்டையையும் தொடங்குவார் என்று பார்க்கப்படுகிறது.