சென்னை இலக்கு
இந்தப் போட்டியில் சென்னை அணி 160 ரன்கள் குவித்து பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் என்ற எட்டக் கூடிய இலக்கை நிர்ணயித்தது. சென்னை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், தோனி முதல் போட்டி போன்றே மூன்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கினார்.
ஹர்பஜன் சுழல்
பஞ்சாப் அணி ஹர்பஜன் சுழலில் சிக்கி 2வது ஓவரில் கெயில், மாயங்க் அகர்வாலை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் - சர்ப்ராஸ் கான், விக்கெட் விழாமல் இருக்க சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் அடக்கி வாசிக்கவும், வேகப் பந்துவீச்சாளர்கள் ஓவரில் அடித்து ஆடவும் முடிவு செய்தனர்.
குஷியில் ரசிகர்கள்
14வது ஓவர் வரை இவர்கள் திட்டம் சரியாக செயல்பட்டது. மேற்கொண்டு விக்கெட் விழாமல் பஞ்சாப் அணி 14வது ஓவரில் 100 ரன்களை தொட்டது. அடுத்து ஆறு ஓவர்களில் 61 ரன்கள் எடுத்தல் வெற்றி. ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் போதும். கையில் எட்டு விக்கெட்கள் உள்ளன. ஆஹா.. சென்னை இரண்டாவது தோல்வியை சந்திக்கப் போகிறது என பஞ்சாப் ரசிகர்கள் குஷியில் இருந்தனர்.
பாதுகாத்து ஆடினர்
ஆனால், அதன் பின்னும் அடித்து ஆடாத ராகுல் - சர்ப்ராஸ் ஜோடி விக்கெட்டை பாதுகாத்து ஓவருக்கு 5 ரன்னுக்கு மேல் எடுக்க மாட்டோம் என 17வது ஓவர் வரை கட்டை போட்டு ஒற்றை ரன்கள் எடுப்பதில் ஆர்வம் செலுத்தினர். 12வது ஓவரில் இருந்து 17வது ஓவர் வரை மூச்சுக்கு கூட பவுண்டரி அடிக்கவில்லை.
ஆண்ட்ரே ரஸ்ஸல் மாதிரி..
இதனால், கடைசி மூன்று ஓவர்களில் 46 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை. கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் இரண்டு போட்டிகளில் கடைசி மூன்று ஓவர்களில் 53 ரன்கள் அடித்தார் என்றால், நம்ம ராகுலால் முடியாதா என்ன?
விக்கெட்டை இழந்தார்
ராகுல் 18வது ஓவரில் 3வது பந்தில் அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர், ராகுல் - சர்ப்ராஸ் செய்து வைத்திருந்த சொதப்பலை சரிகட்ட, ஒரு பவுண்டரி அடித்தார். இருந்தாலும் அடுத்து தீபக் சாஹர் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள், 20வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து பஞ்சாப் 22 ரன்களில் தோல்வி அடைந்தது.
கடுப்பில் ரசிகர்கள்
கடைசி ஓவரில் சர்ப்ராஸ் முதல் மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ராகுல் 55 ரன்கள், சர்ப்ராஸ் 67 ரன்கள் என இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால், இதை நினைத்து அழுவதா, சிரிப்பதா என தெரியாமல் பஞ்சாப் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.