சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கடைசி ஓவரை வீச ரவி பிஷ்னாயை அட்டாக்கில் கொண்டு வராததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் ரவி பிஷ்னாயை சமாளிக்க தோனி களத்தில் திட்டம் வைத்திருந்துள்ளார். இதுகுறித்து சிவம் துபே வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை விளாசியது. இந்த இலக்கை 19.3 ஓவர்களில் சிஎஸ்கே அணி சேஸிங் செய்து மாஸ் கம்பேக்கை கொடுத்தது. கடைசி வரை தோனி களத்தில் இருந்து 11 பந்துகளில் 26 ரன்களை விளாசினார்.

அதேபோல் சிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் செய்த தவறு காரணமாகவே அந்த அணி தோல்வியடைந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். ஏனென்றால் இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த ரவி பிஷ்னாய் 3 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இவருக்கு ஏன் 4வது ஓவரை ரிஷப் பண்ட் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி திணறுவது தொடர்ந்து வரும் நிலையில், தோனி களமிறங்கிய உடனே ரவி பிஷ்னாய் அட்டாக்கில் வந்திருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் தோனி களமிறங்கிய உடனே, ரவி பிஷ்னாயை சமாளிப்பது எப்படி என்ற திட்டத்துடன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே பேசுகையில், 18 ஓவர்கள் முடிவடைந்த பின் தோனி என்னிடம் சில வார்த்தைகள் சொன்னார்.. ரவி பிஷ்னாய்-க்கு இன்னும் ஒரு ஓவர் மீதம் உள்ளது. ஒருவேளை நீ கடைசி வரை களத்தில் நின்று விளையாடினால், நிச்சயமாக ரவி பிஷ்னாயை அட்டாக்கில் கொண்டு வர மாட்டார்கள் என்றார்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை எளிதாக தோனி விளாசி தள்ளினார். தோனியின் திட்டத்தை நான் சரியாக செய்தேன் என்று தெரிவித்தார். சிவம் துபே களத்தில் இருந்ததால் 19வது ஓவரை வீச ரவி பிஷ்னாய்-க்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் சிஎஸ்கே அணி 19 ரன்களை விளாசியதால், கடைசி ஓவரில் எளிதாக வெற்றியை பெற்றது.
கிட்டத்தட்ட 44 வயதை எட்டிவிட்ட தோனி, இப்போதும் அடிப்படையான சில விஷயங்களில் தெளிவாக இருப்பது இளம் கேப்டன்களுக்கு முக்கிய பாடமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சேஸிங்கின் போது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மிகப்பெரிய சொதப்பலை செய்தது. அஷுதோஷ் சர்மா களத்தில் இருந்திருந்தாலே எளிதாக வென்றிருக்க முடியும். ஆனால் அவசரம் காரணமாக ரன் அவுட்டாகி வெளியேறியதோடு, டெல்லி அணியும் தோல்வியடைந்தது.