சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் மற்றும் உர்வில் படேல் ஆகிய 3 வீரர்கள் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இளம் வீரர்களை ஸ்கவுட்டிங் செய்து வாய்ப்புகளை அளிப்பதில் மும்பை அணிக்கு கொஞ்சம் கூட சிஎஸ்கே அணி சளைத்தது அல்ல என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வழக்கமாக அனுபவ வீரர்களையே அதிக நம்பி முதலீடு செய்து வந்தது. ஆனால் இந்த சீசனில் அனுபவ வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாததால், சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் நிர்வாகிகள் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. ஏனென்றால் தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட், துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு பின் எந்த இளம் வீரர்களும் பெரியளவில் உருவாக்கப்படவில்லை.

ஆனால் மும்பை அணியோ விக்னேஷ் புத்தூர், நேஹல் வதேரா, அஸ்வனி குமார், திலக் வர்மா என்று ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு வீரரை உருவாக்கி வந்தது. பஞ்சாப் அணியோ பிரியன்ஷ் ஆர்யா, சூர்யவன்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், அர்ஷ்தீப் சிங், அஷுதோஷ் சர்மா என்று ஒவ்வொரு சீசனிலும் ஒரு வீரரை உருவாக்கியது.
இப்படி கேகேஆர், டெல்லி, ராஜஸ்தான் அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வந்தது. இதுதொடர்பாக சிஎஸ்கே அணி ஸ்கவுட்டிங் நிர்வாகியான வித்யூத் பேசுகையில், பிரியன்ஷ் ஆர்யா, விப்ராஜ் நிகம், நேஹல் வதேரா போன்ற வீரர்களை நாங்களும் சிஎஸ்கே அணி பரிந்துரை செய்தோம். ஆனால் அவர்கள் ஏலத்தில் வாங்கவில்லை என்று வெளிப்படையாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்தடுத்து ஸ்கவுட்டிங் செய்து 3 வீரர்களை ஒப்பந்தம் செய்தது. அதில் 17 வயதாகும் மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரே, தென்னாப்பிரிக்கா வீரர் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த உர்வில் படேல் ஆகிய 3 பேரும் சிஎஸ்கே அணிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 3 வீரர்களும் சிஎஸ்கே அணிக்காக சிறந்த இன்னிங்ஸை விளையாடி தோனியின் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். வழக்கமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் சிஎஸ்கே நிர்வாகம் சந்தேகத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஒரு வீரருக்கு நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தால், தொடர் வாய்ப்புகளை அளித்து பெரிய வீரர்களாக உருவாக்கிவிடும்.
அந்த வகையில் திறமையை அடையாளம் செய்வதில் சிஎஸ்கே நிர்வாகம் என்றும் பின்னடைவை சந்தித்ததில்லை. தற்போது இளம் வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பு அளித்துள்ளதன் மூலமாக, மும்பை மற்றும் கேகேஆர் அணிகளுக்கும் சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் நிர்வாகிகள் சவால் அளிக்க முடியும் என்று நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.