மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்துள்ளது. மிடில் ஓவர்களில் தொடர்ச்சியாக 29 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் சிஎஸ்கே அணி திண்டாடிய நிலையில், அஸ்வனி குமார் வீசிய ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசிய சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்தது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், அஸ்வனி குமார் பந்தில் ரச்சின் 5 ரன்களில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே களம் புகுந்தார். அவர் களமிறங்கி எதிர்கொண்ட அந்த ஓவரிலேயே 4, 6, 6 என்று வெளுத்து கட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஆயுஷ் மாத்ரே, பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 48 ரன்களை சேர்த்திருந்தது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரேவுக்கு திடீரென ஸ்லோயர் பவுன்சர் ஒன்றை தீபக் சஹ்ர் வீசினார்.
அந்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆயுஷ் மாத்ரே 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஷேக் ரஷீத் 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா - சிவம் துபே கூட்டணி களத்தில் இருந்தது. இருவரும் கொஞ்சம் கூட பவுண்டரி அடிக்கும் முயற்சியில் கூட ஈடுபடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 73 ரன்களை எடுத்திருந்தது.
29 பந்துகளாக பவுண்டரி அடிக்கப்படாத நிலையில், போல்ட் பவுலிங்கில் சிவம் துபே பவுண்டரியை விளாசினார். இதன்பின் சிவம் துபே அட்டாக்கில் ஈடுபட, அடுத்தடுத்து சில சிக்சர்கள் விளாசப்பட்டது. இதனால் 15 ஓவர்களில் சிஎஸ்கே ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து 16வது ஓவரை வீசிய அஸ்வனி குமார் பந்தில் 4, 6, 6 என்று விளாசிய சிவம் துபே, 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் ஜடேஜாவும் சிக்ஸ் அடிக்க, மொத்தமாக 24 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் பும்ரா பவுலிங்கில் சிவம் துபே 50 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக தோனி களம் புகுந்தார். இதனால் வான்கடே மைதானமே அதிர தொடங்கியது.
ஆனால் சிவம் துபே ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. தொடர்ந்து பும்ரா பந்தில் தோனி 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேமி ஓவர்டன் களம் புகுந்தார். பின்னர் கடைசி ஓவரை வீச போல்ட் வந்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட, சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்துள்ளது. கடைசி வரை நின்ற ஜடேஜா 53 ரன்களை சேர்த்தார்.