சென்னை: சிஎஸ்கே அணிக்காக புதிய வெளிநாட்டு வீரராக தென்னாப்பிரிக்காவின் பேபி ஏபி டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரஞ்சி டிராபி தொடரில் தமிழக அணிக்காக ஆடி வந்த குர்ஜப்னீத் சிங் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் காயம் காரணமாக விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி இம்முறை தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6ல் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் பொறுப்பு கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். தோனி கேப்டனாக பொறுப்புக்கு வந்த பின் ஷேக் ரஷீத், அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, சிஎஸ்கே அணியும் கம்பேக் கொடுத்துள்ளது.
இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வன்ஷ் பேடி உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே சிஎஸ்கே அணி அடுத்ததாக வான்கடே மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
அதாவது தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்னீத் சிங், தமிழக அணிக்காக ஆடி இருந்தார். சிஎஸ்கே அணிக்காக வாய்ப்பு கிடைக்காமல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அதேபோல் வெளிநாட்டு வீரரான டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ்-ன் ஜூனியராக பார்க்கப்பட்ட டிவால்ட் பிரெவிஸ், கடந்த 3 சீசன்களாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரெவிஸை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணியிலும் ஒரு வெளிநாட்டு வீரரை வாங்குவதற்கு இடமிருந்தது. இதனால் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் நம்பர் 3ல் இடத்தில் விளையாடுவதற்கு பிரெவிஸ் சரியான வீரராக இருப்பார். அதேபோல் மும்பை அணிக்காக விளையாடிய பின் சிஎஸ்கே அணிக்கு வரும் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிராவோ, ராயுடு, ஹர்பஜன் சிங், உத்தப்பா, டுவைன் ஸ்மித் என்று நீண்ட வரிசை உள்ளது. அதில் பிரெவிஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.