சென்னை: ஐபிஎல் தொடர் பாதியளவு முடிவடைந்த நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் ஜாம்பவானான ஏபி டி வில்லியர்ஸ்-ன் சாயலில் விளையாடும் டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது சிஎஸ்கே அணியின் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் இந்த சீசனில் ஐசியூவில் இருக்கிறது. ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, சாம் கரண், விஜய் சங்கர் என்று எந்த வீரரும் சிஎஸ்கே அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. குறிப்பாக சிக்ஸ், பவுண்டரி விளாச முடியாததால் சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.

இந்த நிலையில் சிறந்த சிக்ஸ் ஹிட்டரான டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் விளையாடவிருப்பது அந்த அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ரச்சின் ரவீந்திரா, டிவால்ட் பிரெவிஸ், நூர் அஹ்மத் மற்றும் பதிரானா ஆகிய தரமான 4 வெளிநாட்டு வீரர்களையும் சிஎஸ்கே அணியில் சரியாக பொருத்த முடியும்.
அதேபோல் 4 பேருமே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ன் வயதிற்கு குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சமாளிப்பதும் எளிதாக இருக்கும். இந்த ஒப்பந்தமும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ மனதில் வைத்தே எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு வந்தவர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.
தொடக்கத்தில் மும்பை அணிக்காக ஆடிய டுவைன் பிராவோ, பின்னர் சிஎஸ்கே அணிக்காக ஆடி கடைசி வரை சென்னை அணியிலேயே இருந்து ஓய்வு பெற்றார். அதேபோல் 2008ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஆடிய ஆஷிஷ் நெஹ்ரா, சிஎஸ்கே அணிக்காக 2 சீசன்களில் பட்டையை கிளப்பினார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் ஸ்மித் மும்பை அணிக்கு பின் சிஎஸ்கேவில் விளையாடி அற்புதங்களை செய்தார்.
அதேபோல் நீண்ட ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்தார். குறிப்பாக அம்பதி ராயுடு மும்பை அணியில் இருந்து சிஎஸ்கே அணி வந்த பின், கடைசி வரை சென்னை அணியுடன் தொடர்ந்து ஓய்வு பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் கரண் சர்மா, ராபின் உத்தப்பா, அஜிங்கியா ரஹானே, முஸ்தாஃபிகுர் ரஹ்மான் என்று ஏராளமான வீரர்கள் சிஎஸ்கே அணியின் சாதனை வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளனர். அந்த வகையில் மும்பை அணிக்காக 2 சீசன்களில் விளையாடிய டிவால்ட் பிரெவிஸ், இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார். அவரின் இந்த வீரர்களின் வரிசையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.