சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் சிஎஸ்கே அணிக்காக தான் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆடுவேன் என்றும், சக்கர நாற்காலியில் இருந்தாலும் அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள் என கூறி இருக்கிறார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தோனி ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இவ்வாறு பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் பேச்சை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் தோனி. 2008 முதல் 2023 வரை சுமார் 15 ஆண்டு காலம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு முதல் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இடம் பெற்று இருக்கிறார். 43 வயதான நிலையிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக தற்போது விளையாட இருக்கிறார்.
அவர் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தபோது அவர் அணிந்திருந்த உடையில் மோர்ஸ் கோடு எனப்படும் ரகசிய மொழியில் "இதுவே எனது கடைசி முறை" என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.
43 வயதாகும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது சரியான முடிவாகவே இருந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் தோனி இது பற்றி பேசி இருக்கிறார். "நான் சிஎஸ்கே அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அது எனது அணி. நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்" என சிரித்தபடியே கூறினார்.
தோனி இதை ஒரு நகைச்சுவையைப் போல பேசி இருந்தாலும் இது முற்றிலும் உண்மை என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த பேட்டியால் உருகிப் போய் இருக்கிறார்கள். தீவிரமான தோனி ரசிகர்கள் இந்த பேட்டியை சமூக வலைதளங்களில் பரப்பி தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் லீக் போட்டி இன்று மார்ச் 23 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.