CSK vs MI: கடைசி ஓவரை வீச பயம் ஏன்? இளம் வீரருக்கு கொடுத்தது ஏன்? ஹர்திக்கை சாடிய ஸ்ரீகாந்த்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர்களில் பந்துவீச தயங்கியதை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போட்டியில், பாண்டியா பவர்பிளேயில் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலேயே விக்கெட்டின்றி 38 ரன்களை வாரி வழங்கினார். அதன் பின்னர் அவர் பந்துவீசவில்லை. மாறாக, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் க்ரிஷ் பகத்தை கடைசி ஓவர் உட்பட இரண்டு ஓவர்கள் வீசப்பணித்தார்.

க்ரிஷ் பகத் அனுபவமின்மையால் தடுமாறினார். அவர் வீசிய இரண்டு ஓவர்களில் 31 ரன்களை வழங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்களைக் குவித்தது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
போட்டிக்குப் பின் யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "டி20 உலகக் கோப்பையில் கடைசி ஓவர்கள் வீசிய வீரர் இங்கே பந்துவீச பயப்படுகிறார். மும்பை அணியின் பிரச்சனை இங்கிருந்துதான் தொடங்குகிறது. டாஸ் வென்றால் முதலில் பேட் செய்ய வேண்டும். திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன் போல தனி ஒரு வீரராக சாதிக்கவாவது வாய்ப்பு கிடைக்கும். ஹர்திக் பாண்டியா அதையும் தவறவிட்டார்."
பதிலுக்கு பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தனது பரம எதிரியிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி "சுமார் ரகமானது" என ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.சிஎஸ்கேவுடன் டாஸ் வென்று முதலில் பந்துவீச ஹர்திக் எடுத்த முடிவையும் ஸ்ரீகாந்த் கண்டித்தார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்து வென்றிருந்தாலும், ஹர்திக் சிஎஸ்கேவை எதிர்த்து சேசிங்கை தேர்வுசெய்தார்.
"இது ஹர்திக் பாண்டியாவின் சுமார் ரக கேப்டன்சி. டாஸ் வென்று முதலில் பேட் செய்திருக்க வேண்டும். கொல்கத்தா போட்டியைத் தவிர, அவர்கள் எப்போதும் சேஸ் செய்துதான் தோற்றுள்ளனர்," என்று தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
"நீங்கள் டி20 உலகக் கோப்பையில் கடைசி ஓவர்கள் வீசும் முக்கிய பந்துவீச்சாளர். ஆனால், நீங்கள் பந்துவீசாமல் க்ரிஷ் பகத்தை கடைசி இரண்டு ஓவர்களை வீச அனுமதிக்கிறீர்கள். ஹர்திக் ஒரு ரன்களை வாரி வழங்கும் இயந்திரமாகிவிட்டார். பேட்டிங்கிலும் பந்தை அடிக்க கஷ்டப்படுகிறார்," என்று கடுமையாக சாடினார்.
"இரண்டாவது போட்டியில் விளையாடும் இளம் வீரனுக்கு கடைசி ஓவர் டெலிவரி செய்ய எப்படி வாய்ப்பு தருகிறீர்கள்? ஹர்திக் மற்றும் பகத் இருவரும் 4 ஓவரில் 69 ரன்கள் கொடுத்ததே மிகப்பெரிய வேறுபாடு. க்ரிஷ் பகத் நடு ஓவர்களில் வீசியிருக்கலாம். அணிக்கு பிளேயிங் லெவன் பற்றிய தெளிவில்லை. ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், கேப்டன் என அனைத்திலுமே நம்பிக்கையை இழந்துள்ளார்," என சாடினார்.ஒட்டுமொத்தமாக, இச்சீசன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. பேட்டிங்கில் சராசரி 20 ரன்களுக்கும் கீழே. பந்துவீச்சில் ஓவருக்கு கிட்டத்தட்ட 13 ரன்கள் என ரன்களை வாரி வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications