சென்னை: ஐபிஎல் தொடர் பாதி அளவு முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் தென்னாப்பிரிக்கா அணியின் டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மும்பை அணிக்காக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி ஆகியவற்றுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் மோசமான மிடில் ஆர்டரே சிஎஸ்கே அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மிடில் ஆர்டரில் வரும் வீரர்களால் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிரடியாக விளையாட தடுமாறி வருகின்றனர்.

அதனை சரி செய்யும் வகையில் இளம் வீரரான டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இளம் வீரரான டிவால்ட் பிரெவிஸ் 2 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். முதல் சீசனில் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை என்றாலும், 2வது சீசனில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் உலகின் பல்வேறு லீக் தொடர்களிலும் பிரெவிஸ் சிறப்பாக ஆடி வந்தார்.
இதனால் டி வில்லியர்ஸ் வரிசையில் விரைவில் 360 டிகிரியில் அதிரடி விளாசி தள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே 2010ஆம் ஆண்டுக்கு பின் ஒரு வெளிநாட்டு வீரரை சிஎஸ்கே அணி பாதி சீசனில் ஒப்பந்தம் செய்துள்ளது. கடைசியாக 2010ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜேகப் ஓரம் காயம் காரணமாக விலகினார்.
இதனால் 7 போட்டிகளுக்கு பின் திடீரென சிஎஸ்கே அணி பொலிஞ்சரை ஒப்பந்தம் செய்தது. அந்த சீசனிலும் சிஎஸ்கே அணி முதல் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் பொலிஞ்சரின் இணைப்பு, சிஎஸ்கே அணியின் பவுலிங்கிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அங்கிருந்து 7ல் 6 போட்டிகளில் வென்ற சிஎஸ்கே அணி, கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தற்போது மீண்டும் 7 போட்டிகளுக்கு பின் ஒரு வீரரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. எப்படி சிஎஸ்கே பவுலிங் மோசமாக இருந்ததோ, அதேபோல் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரும் மோசமாக இருக்கிறது. இதனால் பிரெவிஸ் உடனடியாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் 12ல் சேர்க்கப்பட்டால், சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.