மும்பை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் இருந்து ராகுல் திரிப்பாட்டி நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு எதிரான ஆடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஆனால் இம்முறை மும்பை அணி முழு பலத்துடன் இருப்பதால், சிஎஸ்கே அணியால் கம்பேக் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணியோ 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதால், ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி வான்கடே மைதானத்தில் 8ஆம் நம்பர் பிட்சில் நடக்கவுள்ளது. இந்த பிட்சில் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைக்கும். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி ஆடிய பிட்ச் இது அல்ல. இதனால் சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் கூடுதல் அதிரடியாக விளையாட வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய பிட்சில் விளையாடுகிறோம். அதனால் கூடுதலாக பிட்சின் தன்மை குறித்து அறிந்துள்ளதால், எங்களின் திட்டத்தை செயல்படுத்த முடியும். அதேபோல் பிட்சில் கொஞ்சம் புற்களும் உள்ளது. அதனால் பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும்.
இதுவரை செய்த பணிகளை சிறப்பாக தொடர வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து தோனி பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே நினைத்தோம். அதற்கு முக்கிய காரணம் 2ஆம் பாதியில் வரப்போகும் பனிப்பொழிவுதான். நாங்கள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம். அதனால் எதிர்காலத்தை நினைத்து பார்த்தால், எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.
அதனால் ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்த உள்ளோம். நாங்கள் போல்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதேபோல் பேட்ஸ்மேன்கள் தங்களின் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பவுலர்களுக்கும் அதுதான். இந்த போட்டியில் ஃபீல்டிங் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த போட்டியில் ராகுல் திரிப்பாட்டிக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.