மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இரு அணி வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் மற்றும் மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா ஆகிய இருவருக்கும் இடையே மைதானத்திலேயே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் மோதலாக மாற, சூர்யகுமார் யாதவ் குறுக்கிட்டது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டமாகக் கருதப்படும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதலில் நேற்று அனல் பறந்தது. மும்பை அணி பேட்டிங் செய்தபோது 10-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. ஜேமி ஓவர்டன் வீசிய மெதுவான பந்தை திலக் வர்மா தட்டிவிட்டு 2 ரன்கள் எடுக்க முயன்றார். ஆனால் எதிர்முனையில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதற்கு மறுக்கவே, திலக் வர்மா ஒரு ரன்னுடன் நிற்க வேண்டியிருந்தது.

அப்போது ஜேமி ஓவர்டன் பந்தை எடுக்க திலக் வர்மாவின் பாதையில் குறுக்கே வந்ததாகத் தெரிகிறது. இதனால் பந்தை எறியும் வீரரைத் தன்னால் பார்க்க முடியவில்லை என்று எரிச்சலடைந்த திலக் வர்மா, ஓவர்டனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட சூர்யகுமார் யாதவும் ஜேமி ஓவர்டனிடம் சில வார்த்தைகளைக் கூறினார். இதையடுத்து அம்பயர்கள் உடனடியாகத் தலையிட்டு மூன்று வீரர்களையும் சமாதானப்படுத்தி பிரித்து வைத்தனர். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இருப்பினும், போட்டி முடிந்த பிறகு தங்களது பழைய பகையை மறந்து திலக் வர்மா மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்துத் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து சமாதானம் ஆகினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி சிஎஸ்கே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்குச் சுருண்டது. சிஎஸ்கே தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை நிலைகுலைத்தார். நூர் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், "வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராகச் சதம் அடிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு விளையாடியது பலன் அளித்தது" எனத் தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணி 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
