மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே தோல்விக்கு காரணம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் 6 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம் என்று கூறிய அவர், ஒருவேளை வெற்றி பெறவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து வென்றது.

இந்த தோல்வியின் காரணமாக சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே தொடர்கிறது. இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், சிஎஸ்கே அணி அடுத்து விளையாடவுள்ள 6 போட்டிகளில் 6லும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசுகையில், பேட்டிங்கிலேயே நாங்கள் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். நிச்சயமாக 2ஆம் பாதியில் பனிப்பொழிவு வரும் என்பது தெரியும். அதேபோல் உலகில் இன்று மிகச்சிறந்த டெத் பவுலராக பும்ரா இருக்கிறார். மும்பை அணி டெத் பவுலிங்கை கொஞ்சம் விரைவாகவே தொடங்கிவிட்டது.
அதேபோல் சிஎஸ்கே அணி விரைவாக ரன்களை சேர்க்க தவறிவிட்டது. மிடில் ஓவர்களில் இன்னும் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரே கொடுத்த தாக்கத்தை அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரேவை பொறுத்தவரை மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அவரின் ஷாட்களை சிறப்பாக செயல்படுத்தினார்.
நாங்களும் அவரின் ஆட்டத்தை பெரிதாக பார்த்ததில்லை. மும்பை அணி வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். நாங்கள் சராசரி ஸ்கோரையே அடிக்கவில்லை என்ற போது, அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்தால், ஆட்டம் நம் கைகளில் இருக்காது. இத்தனை சீசன்களாக சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டதற்கு, நல்ல கிரிக்கெட்டை ஆடியதே காரணம்.
இந்த சீசனில் தோல்வியடைவதால் எமோஷனலாக தேவையில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சரியான கிரிக்கெட்டை ஆடுகிறோமா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில கேட்ச்கள் பிடித்திருந்தால், முடிவுகள் மாறி இருக்கும். தற்போது சிஎஸ்கே அணியில் உள்ள ஓட்டைகளை அடைத்து வருகிறோம். அடுத்து வரும் 6 போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம். ஒருவேளை முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராவோம் என்று தெரிவித்துள்ளார்.