சென்னை: சிஎஸ்கே அணி தரப்பில் அடுத்தடுத்து இளம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே, 21 வயதாகும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோருக்கு பின், அடுத்ததாக 19 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியுள்ள 5 போட்டிகளில் கடைசி 4 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் இந்த சீசனில் மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்வி உடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிரடி வீரர்களை வாங்காததன் விளைவை சிஎஸ்கே அணி அனுபவித்து வருகிறது. இதனை அடுத்த சீசனுக்குள் சரி செய்ய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முடிவு எடுத்துள்ளார். அதேபோல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வேலை வாங்குவதற்கு ஏதுவாக இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தேடி தேடி ஒப்பந்தம் செய்து வருகிறது.
இந்த சீசனில் ஒப்பந்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வாய்ப்பையும் சிஎஸ்கே அணி வழங்கி வருகிறது. ஏற்கனவே ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான டிவால்ட் பிரெவிஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேபோல் தோனிக்கான மாற்று வீரரையும் சிஎஸ்கே அணி தேடி வருகிறது. தோனியின் கடைசி சீசனாக இது கிட்டத்தட்ட அமைந்திருப்பதால், மிடில் ஆர்டரில் ஆடக் கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடி வந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முகாமில் 19 வயதாகும் கார்த்திக் சர்மா கண்டறியப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆர்சிபி அணி சார்பாக நடத்தப்பட்ட ட்ரையல்ஸில் கார்த்திக் சர்மா அடித்த சிக்சர்கள் பலரையும் ஈர்த்ததாக கூறப்பட்டது. அதன்பின் சிஎஸ்கே அணியின் முகாமிற்கு வந்துள்ள அவர், அடுத்த போட்டிக்கு முன்பாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் சர்மா, இமாலய சிக்சர்களை விளாசக் கூடியவர்.
அண்மையில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 26 சிக்சர்களை விளாசியவர் கார்த்திக் சர்மா. ராஜஸ்தான் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய கார்த்திக் சர்மா, 201 ரன்களை விளாசினார். 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் ஆடக் கூடிய கார்த்திக் சர்மா, ரஞ்சி டிராபி தொடரின் அறிமுகப் போட்டியிலேயே 115 பந்துகளில் 113 ரன்களை விளாசி கவனத்தை ஈர்த்தார்.
சில நாட்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இருந்த வித்யுத் பேசுகையில், சிஎஸ்கே நிர்வாகிகளுக்கு ஏராளமான வீரர்களை பரிந்துரைத்தோம். பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, விப்ராஜ் நிகாம் உள்ளிட்டோரை பரிந்துரை செய்தோம். அதனை யாரும் ஏற்கவில்லை என்று கூறி இருந்தார். தற்போது ஸ்கவுட்டிங் குழுவினர் பரிந்துரையை சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.