சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில், சென்னை அணி 209 ரன்களைக் குவித்து பஞ்சாப் அணிக்கு சவால் விடுத்துள்ளது. அதற்கு ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், சிவம் துபே ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இந்த சீசனின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஜேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பிறகு ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தாலும், ஆயுஷ் மத்ரே தனது அதிரடியைக் குறைக்கவில்லை. இவர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து சென்னை அணி ஒரு பெரிய ஸ்கோரை எட்ட அடித்தளம் அமைத்தார். விஜய் குமார் வைஷாக் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழக்கும்போது சென்னை அணி வலுவான நிலையில் இருந்தது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிவம் துபே தனது வழக்கமான பாணியில் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் வந்த கார்த்திக் சர்மா 1 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த சர்பராஸ் கான் வாணவேடிக்கை காட்டினார். வெறும் 12 பந்துகளைச் சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 32 ரன்கள் குவித்து மைதானத்தை அதிர வைத்தார். இறுதியில் பிரசாந்த் வீர் 6 ரன்கள் எடுக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, விஜய் குமார் வைஷாக் 4 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாகப் பந்துவீசி 3 ஓவர்களில் 21 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார். ஜேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கோ யான்சன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இருப்பினும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 41 ரன்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 ஓவரில் 17 ரன்களையும் வாரி வழங்கியது அந்த அணிக்குத் பின்னடைவாக அமைந்தது.