சென்னை: சிஎஸ்கே அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, கேப்டன் தோனி அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதுபோன்ற கேள்விகளுக்கு வழக்கமாக தோனி ஆணித்தரமாக பதில் அளித்து வந்த நிலையில், முதல்முறையாக குழப்பமான பதில் ஒன்றை அளித்திருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி களமிறங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மீண்டும் சீனியர் வீரரான தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டாஸின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி வந்த போது, ரசிகர்களின் கோஷம் உச்சத்திற்கு சென்றது. தோனி பேசும் வார்த்தைகளையே வர்ணனையாளர் டேனி மாரிசனால் கேட்க முடியவில்லை. அப்போது டேனி மாரிசன் திடீரென தோனியிடம், சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தோனி சிரித்து கொண்டே, தற்போதைய சூழலில் நான் அடுத்தப் போட்டியில் விளையாடுவேனா என்பதே தெரியவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார். தோனியின் இந்த பதில் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது. 2020ஆம் ஆண்டின் போது தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்ற கேள்வியை டேனி மாரிசன் எழுப்பினார்.
அதற்கு தோனி, Definitely Not என்று பதில் அளித்தது இன்றுவரை ரசிகர்களால் முனுமுனுக்கப்பட்டு வருகிறது. இதுபோல் ஒவ்வொரு சீசனின் போதும் தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்ற கேட்கப்பட்ட போது, ஜாலியாக நிச்சயம் அடுத்த சீசனில் விளையாடுவேன் என்று பதில் அளிப்பார். அதேபோல் ஓய்வு முடிவை எடுப்பதற்கு இன்னும் சில மாதங்கள் நேரம் இருக்கிறது என்று கூறுவார்.
ஆனால் இம்முறை ஜாலியாக, அடுத்த சீசன் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதனால் தோனியின் கடைசி சீசனாக இது இருக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் தோனி 44 வயதை எட்டிவிடுவார். ஏற்கனவே சில ஃபிட்னஸ் பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அணியை மொத்தமாக ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் ஒப்படைப்பார் என்று பார்க்கப்படுகிறது.