சண்டிகர்: சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் ஒரு ஏமாற்றமான ஒன்றாக அமைந்துள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே வீரர்களின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததாக கூறிய அவர், கேட்ச்களை கோட்டைவிடாமல் இருந்திருந்தால் 20 ரன்களை தடுத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே ஆஃப் செல்வது கடினம் என்று அந்த அணியின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் அடுத்த 9 போட்டிகளில் 7ல் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் ஏமாற்றமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் கேட்ச்களை கோட்டைவிட்டோம். இரு அணிகளிலுமே கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளார்கள்.
ஆனால் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் நிச்சயம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. கடந்த 5 போட்டிகளில் மட்டும் மொத்தமாக 11 கேட்ச்களை விட்டிருக்கிறோம். ஒருவேளை சரியாக கேட்ச்களை பிடித்திருந்தால், எளிதாக 20 ரன்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் முன்னேறி இருப்பதுதான் பாசிட்டிவான விஷயமாக பார்க்கிறேன்.
டாப் ஆர்டரில் இருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்தது. ஆனாலும் அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்று சேஸிங் செய்வதில் தடுமாறி இருக்கிறோம். மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தடுமாறியதோடு, கடைசி நேரத்தில் மொத்தமாக திணறிவிட்டோம். கடந்த போட்டிகளை விடவும் இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டத்தில் இருந்தோம்.
ஆனால் தோல்விக்கு நிச்சயம் ஃபீல்டிங் முக்கியமான காரணம். பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக விளையாடினார். கடந்த போட்டியில் அவர் முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய போதும், இந்த போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தது நிச்சயம் பயங்கரமான விஷயம்தான். அவருக்கு ஸ்டம்ப் லைனில் வீசாமல், கொஞ்சம் வெளியில் வீசியது தவறு செய்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.