சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிராக நாளை சிஎஸ்கே அணி விளையாடவுள்ள போட்டிக்கான பிளேயிங் லெவனில் மற்றொரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவரது இடத்தில் வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்படும். இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்ததில்லை. இதனால் இனி வரும் 5 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த சாதனையையாவது தக்க வைக்க முடியும். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணி கடந்த சீசன்களாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி கூடுதல் வலிமையாக இருப்பதால், சிஎஸ்கே அணி வெற்றிபெறுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் சிஎஸ்கே அணி கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்கு வருவதை போன்று தோற்றம் அளிப்பதால், திடீரென எழுச்சி பெறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை, நாளை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில போட்டிகளாகவே ஷேக் ரஷீத், அன்சுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் இந்த போட்டியில் மிடில் ஆர்டர் வீரரான வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதில் வல்லவர். ஏற்கனவே டெல்லி பிரீமியர் லீக் தொடரில் வன்ஷ் பேடி தனது திறமையை நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்த சீசனுக்கான சிஎஸ்கே அணியை கட்டமைக்க தோனி மற்றும் ஃபிளமிங் இருவரும் தீவிரமாக இருக்கின்றனர்.
இதனால் சீனியர்களான விஜய் சங்கர், ராகுல் திரிப்பாட்டி மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு இனியும் வாய்ப்பு அளிக்கப்படாது என்று நம்பப்படுகிறது. இதனால் கடந்த போட்டியில் விளையாடிய தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவரது இடத்தில் வன்ஷ் பேடியை களமிறக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.