சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், அதனை தற்காத்துக் கொள்ள முடியாமல் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வியடைந்தது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் தொடக்க வீரர்கள் மின்னல் வேக தொடக்கத்தை கொடுத்தனர். பிரியன்ஷ் ஆர்யா வெறும் 11 பந்துகளில் 39 ரன்கள் விளாசி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரபுசிம்ரன் சிங் 34 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் கூப்பர் கொனோலி 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வலு சேர்த்தார்.

பொறுப்புடன் விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். நேஹல் வதேரா 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 16.5 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 186 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அப்போது அடுத்தடுத்த பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா ஆட்டமிழந்தனர்.
இதனால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது. 4வது மற்றும் 5வது விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில் விழுந்ததால் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்து வந்த சஷாங்க் சிங் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி எவ்வித பதற்றமும் இன்றி அதிரடியில் இறங்கியது.
சஷாங்க் சிங் 6 பந்துகளில் 14 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 3 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 18.4 ஓவர்களில் எல்லாம் பஞ்சாப் கிங்ஸ் அணி 210 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2023 முதல் தொடர்ந்து சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், ஒரு விசித்திரமான புள்ளிவிவரமும் சிஎஸ்கே ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 6 முறை 200க்கும் அதிகமான ரன்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. அதில் 5 முறை சென்னை அணி படுதோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவின் (73) அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. சிஎஸ்கே அணி தனது முதல் சொந்த மைதான போட்டியிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.