சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாடி வரும் ஜடேஜா, 5வது முறையாக ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான ஷேக் ரஷீத் 11 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் சாம் கரண் - ஜடேஜா கூட்டணி இணைந்தது.

பவர் பிளே ஓவர்கள் என்பதால் பவுண்டரி அடிக்க வேண்டிய கட்டாயம் ஜடேஜாவுக்கு இருந்தது. அதற்கேற்ப சில பவுண்டரிகளை அடிக்க, பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச ஹர்ப்ரீத் ப்ரார் அழைக்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேனுக்கு எதிராக இடதுகை ஸ்பின்னர் அட்டாக்கில் வந்ததால், எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை ஜடேஜா விளாசினார்.
ஆனால் 5வது பந்தில் ஜடேஜா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சீசனில் ஜடேஜா 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 183 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த 10 இன்னிங்ஸில் 5 முறை ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து ஜடேஜா வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக ஜடேஜா மோசமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.
அதனையறிந்த அனைத்து அணிகளும் ஜடேஜாவுக்கு எதிராக தைரியமாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்து அவரின் விக்கெட்டை வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 76 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஜடேஜா 75 ரன்கள் சேர்த்து 5 முறை விக்கெட்டை பறி கொடுத்துள்ளார்.
இத்தனைக்கும் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா நம்பர் 4 பேட்ஸ்மேனாகவே பெரும்பாலான போட்டிகளில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்கு எதிராக மட்டும் அரைசதம் விளாசிய அவர், மற்ற எந்த போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ரூ.18 கோடி ஊதியமாக பெறும் ஜடேஜாவால், சிஎஸ்கே அணி கூடுதல் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் ஜடேஜாவை சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.