சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ், தான் ஆடிய இரண்டாவது போட்டியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக ரன் குவித்து வரும் அவர் ஃபீல்டிங்கிலும் வித்தை காட்டி இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸருக்கு சென்ற பந்தை கேட்ச் பிடித்து இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அவர் பேட்டிங்கில் மிக அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்காவிட்டாலும், 26 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இது சிஎஸ்கே அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. தனது முதல் போட்டியிலும் டெவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் சேர்த்து பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தார்.

பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அவர், ஃபீல்டிங்கிலும் தனது திறமையைக் காட்டினார். குறிப்பாக இந்தப் போட்டியில் அவர் செய்த ஒரு ஃபீல்டிங் முயற்சி சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, அவரை 'வித்தைக்காரர்' என வர்ணித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஷஷாங்க் சிங் அதிரடியாக விளையாடி வந்தார். அவர் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 23 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்றார்.
பந்து பவுண்டரி எல்லைக்குச் செல்லும் நிலையில் இருந்தபோது, டெவால்ட் பிரெவிஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்தார். பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் முன் பந்தைப் பிடித்தவர், பவுண்டரி எல்லையைக் கடந்து வெளியே சென்றார். ஆனால், அதற்கு முன் பந்தை சாதுர்யமாக உள்ளே தூக்கி வீசினார்.
பந்தை முதன்முறை வீசியபோது சரியாகக் கேட்ச் பிடிக்க முடியாததால், மீண்டும் ஒரு காலை மட்டும் பவுண்டரி எல்லைக்குள் வைத்துக்கொண்டு, பந்தை மீண்டும் மேலே தூக்கி வீசிவிட்டு, பின் மீண்டும் பவுண்டரிக்கு வெளியே சென்றார். அடுத்த சில வினாடிகளில் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். சர்க்கஸ் காட்சி போல பிரமிக்க வைத்தது அவரது இந்த ஃபீல்டிங்.
இதையடுத்து ரசிகர்கள் அவரது துடிப்பான செயல்பாட்டையும், சிக்ஸரை விக்கெட்டாக மாற்றிய விதத்தையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். பேட்டிங்கில் தனது ஷாட் தேர்வுகளால் ஏற்கெனவே 'குட்டி ஏபி டி வில்லியர்ஸ்' போல ஆடுவதாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்த டெவால்ட் பிரெவிஸ், இப்போது தனது ஃபீல்டிங்காலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஷஷாங்க் சிங் விக்கெட் வீழ்ந்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் சற்று அழுத்தம் ஏற்பட்டது. எனினும், பஞ்சாப் அணி 19.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.