சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு கேட்ச்களை கோட்டைவிட்டதே காரணம் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். சாம் கரண் கடைசி வரை போராட்டக் கூடிய வீரர் என்று பாராட்டியுள்ள தோனி, அடுத்தடுத்த சீசன்களில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சொத்தாக பிரெவிஸ் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களுக்கு 190 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்த தோல்வி குறித்து தோனி பேசுகையில், முதல்முறையாக சிஎஸ்கே அணி தரப்பில் சிறந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் குறைவான ஸ்கோராகவே பார்க்கிறேன். இந்த பிட்சில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூடுதலாக முயற்சித்து ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். சாம் கரண் மற்றும் பிரெவிஸ் இடையிலான பார்ட்னர்ஷிப் அசத்தலாக இருந்தது. சிஎஸ்கே அணி ஃபீல்டர்கள் கேட்ச்களை தொடர்ந்து பிடிக்க வேண்டும். சாம் கரண் மிகச்சிறப்பாக போராடக் கூடிய ஒரு வீரர்.
இந்த சீசனில் எப்போது சாம் கரணுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்திருக்கிறது. அதேபோல் இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் கிடைத்த சிறந்த பிட்ச் இதுதான். பிரெவிஸ் பற்றி கூற வேண்டுமென்றால், மிடில் ஆர்டரில் ஒரு பாசிட்டிவ் மனநிலை வந்துள்ளது. சிறந்த ஃபீல்டராகவும் இருக்கிறார்.
அதேபோல் சிறந்த பந்துகளையும் எளிதாக பவுண்டரிக்கு அடிக்கக் கூடியவராக இருக்கிறார். களத்தில் நல்ல எனர்ஜியை கொண்டு வருகிறார். சிஎஸ்கே அணிக்கு இதுபோன்ற இளம் இரத்தங்கள் தேவையாக இருக்கிறது. வரும் காலங்களில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பெரிய ரன்களை இரு அணிகளும் சேர்த்திருக்கிறோம். ஆனால் ஒன்றை மனதில் வைக்க வேண்டும். அதாவது கடைசி 4 பந்துகளை சிஎஸ்கே அணி விளையாடவில்லை. அதேபோல் அதற்கு முந்தைய ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளோம். இதுபோன்ற போட்டிகளில் அது மிகப்பெரிய வித்தியாசம் என்றும் கூறியுள்ளார்.