சென்னை: பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யாவின் வளர்ச்சியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பங்கு முக்கியமானது என்று அவரின் தந்தை பவன் ஆர்யா தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரின் ஆலோசனைபடி பிரியன்ஷ் ஆர்யா செயல்பட்டு வந்துள்ள நிலையில், அவரை டெல்லி பிரீமியர் லீக் தொடரில் விளையாடுமாறு கம்பீர் அறிவுறுத்தி இருக்கிறார். அதுவே அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா காரணமாக அமைந்துள்ளார். 19 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

சிறப்பாக ஆடிய அவர் 42 பந்துகளில் 9 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 103 ரன்களை விளாசி தள்ளினார். முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த அவர், சிஎஸ்கே அணியின் அஸ்வின், நூர் அஹ்மத், பதிரானா உள்ளிட்டோரின் பவுலிங்கில் சிக்சர்களாக விளாசி மிரட்டினார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த வீரரான அவர், விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரியன்ஷ் ஆர்யாவின் தந்தை பவன் ஆர்யா பேசுகையில், யு19 கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரியன்ஷ் 271 ரன்களை விளாசினார். அப்போது முதல் கவுதம் கம்பீர் தான் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக ஆலோசனை கூறி வருகிறார்.
கவுதம் கம்பீர் எப்போதும் எவ்வளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியுமோ, அத்தனை போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கூறுவார். டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பிரியன்ஷ் ஆர்யாவை விளையாடுமாறு கம்பீர் தான் அறிவுறுத்தினார். வெப்பமான சூழலில் விளையாட வேண்டும் என்றும், அழுத்தமான சூழல்களில் விளையாடி பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதுதான் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு உதவி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே கவுதம் கம்பீரின் வலைப்பயிற்சியை பார்த்து வளர்ந்தவர் பிரியன்ஷ் ஆர்யா. கம்பீர் பயிற்சி பெற்ற அதே அகாடமியில் பிரியன்ஷ் ஆர்யாவும் பயிற்சி பெற்ற நிலையில், கம்பீரின் பார்வை பிரியன்ஷ் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனால் கம்பீரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.