தரம்சாலா : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் இரண்டு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் சேர்ந்து மோசமான ரெக்கார்டு ஒன்றை செய்துள்ளனர்.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது தோனி ஒன்பதாம் வரிசையில் இறங்கினார். அவர் சிக்ஸ் மழை பொழியப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தனது அணி சேஸிங்கில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்த போது களமிறங்கி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இது போல ஒரு பேட்ஸ்மேன் தாங்கள் சந்திக்கும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆவது கோல்டன் டக் அவுட் என கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் தோனி மற்றும் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ஆகிய இருவரும் கோல்டன் டக் அவுட் ஆனதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் கோல்டன் டக் அவுட் ஆகி இருக்கின்றனர்.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அந்த இரு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தனர்.
அப்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் கோல்டன் டக் அவுட் ஆகி அந்த மோசமான சாதனையை முதன்முறையாக ஐபிஎல் தொடரில் பதிவு செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு தோனி மற்றும் ஜிதேஷ் சர்மா அதே மோசமான சாதனையை செய்துள்ளனர். அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் டக் அவுட் ஆகி இருக்கும் சம்பவம் 4 முறை நடைபெற்றுள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக தோனி மற்றும் ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆகி இருக்கின்றனர்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.