சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது 18வது ஓவரின் இறுதியில் தோனி பேட்டிங் செய்ய வந்தார்.
19வது ஓவரில் தோனியால் ரன் எடுக்க முடியவில்லை. மேலும், களத்தில் இருந்த மொயீன் அலியும் அவுட் ஆகி சென்றார். அடுத்து டேரில் மிட்செல் களத்துக்கு வந்தார். 19வது ஓவரில் தோனி 2 ரன்களும், மிட்செல் 1 ரன்னும் எடுத்தனர்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் தோனி முதல் பந்தை சந்தித்தார். முதல் பந்தில் ஃபோர் அடித்த அவர் அடுத்த பந்தில் ரன் எடுக்க தவறினார். இந்த நிலையில் மூன்றாவது பந்தை தோனி பவுண்டரி எல்லைக்கு அருகே அடித்தார். எதிரில் இருந்த டேரில் மிட்செல் ரன் ஓடி வந்தார். ஆனால், தோனி தானே கடைசி ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை திருப்பி அனுப்பினார்.
டேரில் மிட்செல் எதிர்முனை கிரீசுக்கு சென்ற நிலையில் தோனி, "திரும்பிப் போ" என கத்தியதால் திரும்பி ஓடினார் மிட்செல். நூலிழையில் ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். பின்னர் தோனியால் ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. 19 ஓவரில் 3 ரன்களும், கடைசி ஓவரில் 13 ரன்களும் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி.
இதை அடுத்து தோனி சுயநலமாக நடந்து கொண்டார் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. தோனியால் ரன் குவிக்க முடியாத நிலையில் அந்த சிங்கிள் ரன்களை தோனி ஓடி இருந்தால் கூடுதல் ரன்கள் கிடைத்து இருக்கும் என சிலர் கூறுகின்றனர். அதாவது டேரில் மிட்செல் இரண்டு ரன்கள் ஓடி இருக்கிறார். தோனியும் அப்போது ரன் ஓடி இருந்தால் 2 ரன்கள் கிடைத்து இருக்கும் என்பதோடு தோனியே மீண்டும் பேட்டிங் ஆடி இருப்பார் என கூறி வருகின்றனர்.
அதே சமயம் தோனி ரசிகர்கள் அந்த சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த தோனி பேட்டிங் ஆட நினைத்ததில் தவறில்லை. இதற்கு முன்பும் தோனி இதுபோல கடைசி ஓவர்களில் ரன் ஓட மறுத்து இருக்கிறார் என கூறி மற்றவர்கள் வன்மத்துடன் தோனி குறித்து குற்றம் சுமத்துவதாக பதிலடி அளித்து வருகின்றனர்.