சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். தொடர்ந்து ஐந்து முறை சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது மிடில் ஓவர்களில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ருதுராஜ் கெய்க்வாட் 62, ரஹானே 29, சமீர் ரிஸ்வி 21, மொயீன் அலி 15, தோனி 14 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ராகுல் சாஹர் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து 163 ரன்களை சேஸிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஜானி பேர்ஸ்டோ 46, ரைலி ரூசோ 43, ஷஷான்க் சிங் 25, சாம் கர்ரன் 26 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த அணி சிஎஸ்கே. இந்த அணியை வீழ்த்துவதை ஒவ்வொரு அணியும் முக்கிய மைல்கல்லாக பார்த்து வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான தங்களின் கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்தது.
இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே சிஎஸ்கே அணியை தொடர்ந்து ஐந்து முறை வீழ்த்தி இருந்தது. தற்போது அந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணியும் பகிர்ந்து கொண்டது.