சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எடுக்கும் முடிவுகளில் சிறிய குழப்பம் கூட இருக்காது என்று பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார். அந்த முடிவால் என்ன மாதிரியான விளைவுகள் வந்தாலும், அதனை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் பிரப்சிம்ரன் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 5 வெற்றி, 3 தோல்வி உட்பட புள்ளிப் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்னும் 3 போட்டிகளில் வென்றால் போதுமானது.

பஞ்சாப் அணி வீரர்கள் அனைவரும் சிறந்த ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்பாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் பேசுகையில், பஞ்சாப் அணியுடன் 7 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன்.
இதன் மூலமாக பஞ்சாப் அணி நிர்வாகம் எவ்வளவு ஆதரவாக எனக்கு இருந்திருக்கிறார்கள் என்பது புரியும். அதேபோல் இந்த சீசனில் வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் வெல்வதற்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், நிச்சயம் கோப்பையை வெல்வது மட்டுமே இலக்கு. எனக்கு 7 ஆண்டுகளாக ஆதரவளித்த பஞ்சாப் அணிக்கு, கைமாறாக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே பாசிட்டிவான மனநிலை கொண்டவர்கள்.
அவர்களின் ஆதரவு இருப்பதால், எந்த குழப்பமும் இல்லாமல் களத்தில் விளையாட முடிகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் எடுக்கும் முடிவுகளில் எந்த குழப்பமும் இருக்காது. அந்த முடிவுக்கு பின் என்ன மாதிரியான ரிசல்ட் கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக, பிரப்சிம்ரன் சிங் என்ற மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக ரிக்கி பாண்டிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.