சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறுக்கு அவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 2025 ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சாம் கரன் அதிரடியாக ஆடினார். அவர் 47 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும், சாம் கரனின் அதிரடி ஆட்டம் ஒரு பக்கம் நீடித்து வந்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி அழுத்தத்தில் இருந்தது.

இந்த அழுத்தத்தின் காரணமாக, ஓவர்களை வீசி முடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஃபீல்டிங் நிறுத்தத்திற்கும், பந்துவீச்சாளர்களுடன் ஆலோசனை செய்வதற்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் 20 ஓவர்களையும் வீசி முடிக்க முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதன்முறையாக ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்தைச் செய்திருக்கிறது.
இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் அந்த அணிக்கு அபராதம் விதித்திருக்கிறது. முதல் முறையாக இந்தக் குற்றம் செய்யப்பட்டதால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டும் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறை இதே தவறு நடந்தால், கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்ச ரூபாய் அபராதமும், அணியின் அனைத்து வீரர்களுக்கும் தலா ஆறு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.