சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். கடைசியாக 2015ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்திருந்தார். தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 32 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப்ன் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய சாம் கரண் 88 ரன்களையும், பிரெவிஸ் 32 ரன்களையும் விளாசினர். பஞ்சாப் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பிரியன்ஷ் ஆர்யா 23 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி ஆட்டமிழந்தனர். பிரப்சிம்ரன் சிங் வெளியேறிய பின், பஞ்சாப் அணியின் பேட்டிங் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் கைகளுக்கு வந்தது.
அதற்கேற்ப தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 20 பந்துகளில் 25 ரன்களை சேர்த்திருந்தார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர், பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டினார். இதன் காரணமாக 32 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி அசத்தினார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் 2வது அரைசதம் இதுவாகும்.
கடைசியாக 2015ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்திருந்தார். அதன்பின் இன்றைய ஆட்டத்தில்தான் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி இருக்கிறார். அதேபோல் இந்த சீசனில் அந்நிய மைதானங்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் அபாரமாக அமைந்துள்ளது.
இதுவரை அந்நிய மைதானங்களில் 6 போட்டிகளில் ஆடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், 4வது முறையாக அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் கடைசி வரை களத்தில் இருந்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே இருந்திருக்கிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை கட்டுப்படுத்த பவுலர்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.